மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
232நெல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் - நெல் முதலிய நான்கு சொற்களின் ஈற்று லகர மெய் , அல்வழியானும் றகரம் ஆகும் - பொது விதியால் உறழாது அல்வழிக்கண்ணும் வேற்றுமை போல றகர மெய்யாகத் திரியும் .

நெற்கடிது , செற்கடிது , கொற்கடிது , சொற்கடிது , சிறிது , தீது , பெரிது என வரும் .
[ செல் = மேகம் , கொல் = கொல்லன் ]

இதுவும் " லளவேற் றுமையிற் றடவும் " ( சூ . 227 ) என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .