பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு

 
388எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் - யாதொரு பொருளை யாதொரு சொல்லால் யாதொரு வழியால் அறிவுடையோர்கள் சொன்னார்களோ , அப்படிச் செப்புதல் மரபு = அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியால் சொல்லுதல் மரபு ஆம்.

குதிரைக்குட்டி, யானைக்குட்டி, புலிக்குட்டி எனவும், யானைக்கன்று, பசுக்கன்று, மான்கன்று எனவும், யானையிலண்டம், ஆட்டுப்புழுக்கை, எருமைச்சாணம் எனவும் வரும். இப்படி அன்றிப், பசுவின்குட்டி, குதிரைக்கன்று, யானைச்சாணம், எருமையிலண்டம் எனக் கூறின், மரபு வழுவாம்.

37