பாயிரஇயல்(பொதுப்பாயிரம்)

பாயிரத்தின் பெயர்கள்

 
1முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முகவுரை ........... பாயிரம் - முகவுரை , பதிகம் , அணிந்துரை , நூல்முகம் , புறவுரை , தந்துரை , புனைந்துரை என்பன பாயிரத்திற்குப் பெயர்களாம் .

பாயிரம் - வரலாறு , முகவுரை - நூலுக்குமுன் சொல்லப்படுவது ; நூன்முகம் என்பதும் அது . பதிகம் - ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருளையும் தொகுத்துச் சொல்வது . அணிந்துரை - நூலினது பெருமை முதலியன விளங்க அலங்கரித்துச் சொல்வது ; புனைந்துரை என்பதும் அது . புறவுரை - நூல் சொல்லிய பொருள் அல்லாதவைகளைச் சொல்வது . தந்துரை - நூலிலே சொல்லப்பட்ட பொருள் அல்லாதவைகளை அதற்குத் தந்து சொல்வது .


* பொதுப்பாயிரம் என்னும் தலையங்கம் பாயிரவியல் என்று 23ஆம் பதிப்பில் மாற்றப்பட்டது .