பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
வழிநூலுக்கும் சார்புநூலுக்கும்
எய்தியதன் மேற் சிறப்புவிதி

 
9முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்குங்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முன்னோர் மொழிபொருளே அன்றி - முன்னோர் சொல்லிய பொருளையே அன்றி , அவர் மொழியும் பொன்னே போற் போற்றுவம் என்பதற்கும் - அவரது சொல்லையும் பொன்னைப் போலவே காத்துக்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகவும் , முன்னோரின் வேறு நூல் செய்தும் எனும் - முன்னோர் நூலையே சொல்லாது அந்நூலினின்றும் வழிநூல் சார்புநூல் என வேறு நூல் செய்தோம் ஆயினும் , மேற்கோள் இல் என்பதற்கும் - ஆசிரிய வசனம் இந்நூலினிடத்து இல்லையென்று சொல்லும் குற்றம் ஒழிதற்காகவும் , பழஞ் சூத்திரத்தின் கோள் கூறு - அவர் சொல்லிய பழஞ் சூத்திரங்களையும் ஓரோர் இடங்களில் எடுத்துச் சொல்லு.

எனினும் என்பது எனும் என இடைக்குறைந்து நின்றது. ஆசிரிய வசனம் , மேற்கோள் , பழஞ் சூத்திரம் என்பவை ஒரு பொருட் சொற்கள்.