எழுத்தியல்

பிறப்பு
குற்றியலிகரம்

 
93*யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
யகரம் வரக் குறள் உத் திரி இகரமும் - யகரத்தை முதலிலே உடைய சொல் வரக் குற்றியலுகரந் திரிந்த இகரமும் , அசைச்சொல் மியாவின் இகரமும் - அசைச் சொல்லாகிய மியா என்பதின் மகரத்தின் மேல் இருக்கிற இகரமும் , குறிய - குற்றியலிகரங்களாம் .

நாகு + யாது = நாகி யாது
எஃகு + யாது = எஃகி யாது
வரகு + யாது = வரகி யாது
கொக்கு + யாது = கொக்கி யாது
குரங்கு + யாது = குரங்கி யாது
தெள்கு + யாது = தெள்கியாது
எனவும் ,

கேண்மியா
எனவும் வரும்.

பொதுப்படக் கூறிய குற்றியலுகரம் முப்பத்தாறினாலும் , அசைச்சொல் மியாவினாலும் குற்றியலிகரம் முப்பத்து ஏழாதல் காண்க .

*(அ.கு) குற்றியலுகரமே குற்றியலிகரமானாலும் , எழுத்து முறைமை பற்றிக் குற்றியலிகரம் முதல் கூறப்பட்டது எனக் கொள்க .