பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
சொல் இன்னது என்பது

 
259ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா = ஒருமொழியும் தொடர்மொழியும் பொது மொழியும் என மூன்று பிரிவினதாகி , இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும் = இருதிணையாகிய ஐம்பால் பொருளையும் அப்பொருளையன்றித் தன்னையும் , மூவகையிடத்தும் = மூன்றிடத்திலும் , வழக்கொடு செய்யுளின் - வழக்கினிடத்தும் செய்யுளிடத்தும் , வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல் - வெளிப்படையாலும் குறிப்பினாலும் விளக்குவது சொல்லாகும் .

பொருளையும் தன்னையும் என்றதனால் , உயிர்க்கு அறிவானது கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறுபோல , ஒருவருக்குச் சொல்லானது கருவியாய் நின்று தன்னையும் இருதிணை ஐம்பால் பொருளையும் உணர்த்தும் என்பது பெற்றாம்