வினையியல்

முற்றுவினை
தெரிநிலை வினைமுற்று விகற்பம்

 
324ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
ஒருமைப் பன்மையைத் தன்மைமுன் னிலையினு
முக்கா லத்தினு முரண முறையே
மூவைந் திருமூன் றாறாய் முற்று
வினைப்பத மொன்றே மூவொன் பானாம்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருவன் முதல் ஐந்தையும் படர்க்கையிடத்தும் = ஆண்பால் முதலாகிய ஐம்பால் வினைமுற்றுக்களையும் படர்க்கை இடத்திலும், ஒருமை பன்மையைத் தன்மை முன்னிலையினும் = ஒருமை வினைமுற்றையும் பன்மை வினைமுற்றையும் தன்மை இடத்திலும் முன்னிலை இடத்திலும் வைத்து, முக்காலத்திலும் முரண = முக்காலங்களாலும் மாற, முறையே = சொல்லப்பட்ட முறையே, மூவைந்து = படர்க்கை வினைமுற்றுக்கள் பதினைந்தும், இருமூன்று = தன்மைவினை முற்றுக்கள் ஆறும், ஆறு ஆய் = முன்னிலை வினைமுற்றுக்கள் ஆறும் ஆகி, முற்றுவினைப்பதம் ஒன்றே மூவொன்பான் ஆம் = தெரிநிலை வினைமுற்றுப்பதம் ஒன்றுமே இருபத்து ஏழாகும்.

1. நடந்தான், நடந்தாள், நடந்தார்,நடந்தது, நடந்தன. இவை இறந்தகால வினைமுற்று (5), நடக்கின்றான், நடக்கின்றாள், நடக்கின்றார், நடக்கின்றது , நடக்கின்றன. இவை நிகழ்காலவினைமுற்று(5) நடப்பான், நடப்பாள், நடப்பார், நடப்பது, நடப்பன. இவை எதிர்கால வினைமுற்று -5 ஆகப் படர்க்கை வினைமுற்று - 15.

2. நடந்தேன், நடந்தோம் இவை இறந்தகால வினைமுற்று -2; நடக்கின்றேன் , நடக்கின்றேம் - இவை நிகழ்காலவினைமுற்று -2; நடப்பேன் நடப்பேம் - இவை எதிர்கால வினைமுற்று-2; ஆகத் தன்மை வினைமுற்று-6.

3. நடந்தாய் , நடந்தீர் இவை இறந்தகாலவினை முற்று.2. நடக்கின்றாய், நடக்கின்றீர் இவை நிகழ்காலவினைமுற்று -2;நடப்பாய் நடப்பீர் இவை எதிர்கால வினைமுற்று-2; ஆக முன்னிலை வினைமுற்று -6.
ஆக வகை மூன்றுக்கும் முற்றுவினை - 27.

5