பொதுப்பாயிரம்

மாணாக்கனது வரலாறு
மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்

 
39களிமடி மானி காமி கள்வன்
பிணிய னேழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறனின் னோர்க்குப் பகரார் நூலே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
களி - கள்ளுண்டு களிப்பவனும் , மடி-சோம்பேறியும் , மானி - அகங்காரம் உடையவனும் , காமி - காமமுடையவனும் , கள்வன்-திருடனும் , பிணியன் - நோயாளியும் , ஏழை - அறிவில்லாதவனும் , பிணக்கன் - மாறுபாடு உடையவனும் , சினத்தன் - கோபம் உடையவனும் , துயில்வோன்-மிகத் தூங்குவோனும் , மந்தன் - புத்தி நுட்பம் இல்லாதவனும் , தொன்னூற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன்- பழைய நூல்களைக் கண்டு அஞ்சித் தடுமாறும் உள்ளத்தை உடையவனும் , தறுகணன் - அஞ்சத்தக்கவைகளை அஞ்சாதவனும் , பாவி - பாவஞ் செய்வோனும் , படிறன் - பொய் பேசுவோனும் , இன்னோர்க்கு - ஆகிய இப்படிபட்ட குற்றத்தை உடையவருக்கு , நூல் பகரார் - நூலைச் சொல்லார் ஆசிரியர் .