நூலினது வரலாறு
 
4. நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே
உரை
   
5. முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் உரை
   
6. அவற்றுள்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்
உரை
   
7. முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்
உரை
   
8. இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்
உரை
   
9. முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறுபழம் சூத்திரத்தின் கோள்
உரை
   
10. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே உரை
   
11. எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே
உரை
   
12. குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்றிவை ஈர் ஐங் குற்றம் நூற்கே
உரை
   
13. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல்மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழமுடைத்து ஆதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே
உரை
   
14. நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோள் கூறல்
சொல்பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இதுஎன மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகஎடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்துணர வைப்புஎன உத்திஎண் நான்கே
உரை
   
15. நூல்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி அறிந்து இதற்கு இவ்வகை யாமெனத்
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி
உரை
   
16. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர்மொழிப் புலவர்
உரை
   
17. ஒருநெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்
உரை
   
18. சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்
உரை
   
19. ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப் பாய்த்து
பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை
உரை
   
20. பிண்டம் தொகை வகை குறியே செய்கை
கொண்டு இயல் புறனடைக் கூற்றன சூத்திரம்
உரை
   
21. பாடம் கருத்தே சொல்வகை சொல்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம் என்று ஈரேழ் உரையே
உரை
   
22. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை
உரை
   
23. சூத்திரத்துள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றி யமையா யாவையும் விளங்கத்
தன் உரையானும் பிற நூலானும்
ஐயம் அகல ஐங் காண்டிகை உறுப்பொடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி
உரை
   
24. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல் முடியும் ஆறு
உரை
   
25. உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு
உரை