அகத்திணையியல்
 
அகப்பொருளின் வகை
1 மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை, ஐந்திணை,
பெருந்திணை , என எழு பெற்றித்து ஆகும்.
உரை
   
அகப்பொருள் சொல்லப்படும் திறன்
2. அதுவே,
புனைந்துரை, உலகியல் , எனும் திறம் இரண்டினும்
தொல் இயல் வழாமல் சொல்லப்படுமே.
உரை
   
கைக்கிளை இன்ன தென்பது
3. .அவற்றுள்,
கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்
உரை
   
ஐந்தினை இன்னதென்பது
4. .ஐந்திணை உடையது அன்புடைக் காமம் .
உரை
   
பெருந்தினை இன்னதென்பது
5. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் .
உரை
   
ஐந்திணையின் பெயர்
6. குறிஞ்சி, பாலை , முல்லை , மருதம்,
நெய்தல் , ஐந்திணைக்கு எய்திய பெயரே.
உரை
   
ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்
7. அவைதாம்,
முதல்பொருள் , கருப்பொருள் , உரிப்பொருள் , என முறை
நுதல் பொருள் மூன்றினும் நுவலப்படுமே.
உரை
   
முதல் பொருள்
8. நிலமும் , பொழுதும் ,என முதல் இரு வகைத்தே.
உரை
   
நிலம்
9 வரையே,சுரமே,புறவே, பழனம்,
திரையே;அவை அவை சேர்தரும் இடனே;
என ஈர்- ஐ வகைத்து அனை இயல் நிலமே.
உரை
   
பொழுது
10.. பெரும்பொழுது என்றா. சிறுபொழுது என்றா,
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே.
உரை
   
பெரும்பொழுது
11. காரே, கூதிர் , முன்பனி , பின்பனி,
சீர் இளவேனில் , வேனில் ,என்று ஆங்கு
இரு- மூன்று ,திறத்தது தெரி பெரும் பொழுதே.
உரை
   
சிறுபொழுது
12. மாலை , யாமம் , வைகறை , எற்படு
காலை , வெங்கதிர்காயும் நண்பகல் , எனக்
கைவகைச் சிறுபொழுது ஐ வகைத்து ஆகும்.
உரை
   
குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்
13.அவற்றுள்,
கூதிர் , யாமம் , முன்பனி , என்று இவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும்.
உரை
   
பாலைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்
14. வேனில் , நண்பகல் , பின்பனி , என்று இவை
பான்மையின் உரிய , பாலை தனக்கே.
உரை
   
முல்லைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்
15. மல்கு கார் , மாலை , முல்லைக்கு உரிய .
உரை
   
மருதத்துக்குரிய சிறுபொழுது
16. இருள் புலர் காலை , மருதத்திற்கு உரித்தே.
உரை
   
நெய்தற்குரிய சிறுபொழுது
17. வெய்யோன் பாடு , நெய்தற்கு உரித்தே.
உரை
   
மருதம் நெய்தல் என்னும் இரண்டிற்குரிய பெரும்பொழுது
18. மருதம் , நெய்தல் , என்று இவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இரு -மூன்றும்மே.
உரை
   
கருப்பொருள்
19. ஆரணங்கு , உயர்ந்தோர் , அல்லோர் , புள் , விலங்கு
ஊர் , நீர் ,பூ , மரம் , உணாப் , பறை , யாழ் , பண்,
தொழில் ; எனக் கரு ஈர்-எழு வகைத்து ஆகும்.
உரை
   
குறிஞ்சியின் கருப்பொருள்
20. விறல் சேய் , பொருப்பன் , வெற்பன் , சிலம்பன் ;
குறத்தி , கொடிச்சி , குறவர் , கானவர்,
குறத்தியர் ; கிளி , மயில் ,மறப்புலி , குடாவடி ,
கறையடி, சீயம் , சிறுகுடி , அருவி,
நறுஞ்சுனை ; வேங்கைக் , குறிஞ்சி , காந்தள்,
ஆரம் , தேக்கு , அகில் , அசோகம் , நாகம் ,
வேரல் ; ஐவனம் தோரை , ஏனல்;
கறங்கிசைத் தொண்டகம் , குறிஞ்சியாழ் , குறிஞ்சி ;
வெறிகோள் , ஐவனம்வித்தல் , செறிகுரல்
பைந்தினை காத்தல் ,செந்தேன் அழித்தல் ,
செழுங்கிழங்கு அகழ்தல் , முழங்கி வீழ் அருவியொடு,
கொழுஞ்சுனை ஆடல் ; குறிஞ்சிக் கருப்பொருளே.
உரை
   
பாலையின் கருப்பொருள்
21. கன்னி , விடலை , காளை , மீளி ;
இன்நகை எயிற்றி , எயினர் , எயிற்றியர்,
மறவர் , மறத்தியர் ; புறவு , பருந்து , எருவை
கழுகு ; செந்நாய் , கல்கெழு குறும்பு ,
குழிவறுங் கூவல் , குராஅ , மராஅ,
உழிஞ்சில் , பாலை , ஓமை, இருப்பை;
வழங்குகதிக் கொண்டன , செழும்பதிக் கவர்ந்தன ;
பகைத்துடி , பாலையாழ் ,பஞ்சுரம் ; வெஞ்சமம் ,
பகல் சூறையாடல் ,பாலைக் கருப்பொருளே.
உரை
   
முல்லையின் கருப்பொருள்
22. நெடுமால் , குறும்பொறை , நாடன் , தோன்றல் ,
வடு இல் கற்பின் மனைவி , கிழத்தி ;
இடையர் , இடைச்சியர் ,ஆயர் , ஆய்ச்சியர் ;
கான வாரணம் , மான் ,முயல் ; பாடி ,
குறுஞ்சுனை கான் யாறு ; குல்லை , முல்லை ,
நிறங்கிளர் தோன்றி , பிறங்கு அலர்ப் பிடவம்,
கொன்றை ,காயா ; மன்றலங் குருந்தம் ,
தாற்றுக்கதிர் வரகொடு , சாமை , முதிரை ;
ஏற்றுப்பறை , முல்லையாழ் . சாதாரி;
சாமை ,வரகு , தரமுடன் வித்தல் ,
அவை களை கட்டல் , அரிதல் , கடாவிடல்,
செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல்,
மூ இனம் மேய்த்தல் ,சே இனம் தழுவல்,
கழுமிய குரவையொடு , கான்யாறு என்று இவை
முழுது உடன் ஆடல் , முல்லைக் கருப்பொருளே.
உரை
   
மருதத்தின் கருப்பொருள்
23. இந்திரன் , ஊரன் , பைந்தார் மகிழ்நன் ;
கெழுதகு கற்பின் கிழத்தி , மனைவி,
உழவர் ,உழத்தியர் , கடையர் , கடைச்சியர் ;
மழலை வண்டானம் , மகன்றில் , நாரை,
அன்னம் ,போதா ,நல் நிறக் கம்புள்,
குருகு , தாரா ; எருமை , நீர்நாய் ;
பெருகிய சிறப்பின் பேரூர் , மூதூர்;
ஆறு , மனைக்கிணறு ; இலஞ்சி , தாமரை,
நாறு இதழ்க் கழுநீர் , நறுமலர்க் குவளை ,
காஞ்சி , வஞ்சி , பூஞ்சினை மருதம் ;
செந்நெல் , வெண்நெல் , அந் நெல்லரிகிணை,
மன்றன் முழவம் , மருதயாழ் , மருதம் ;
மன்று அணி விழாக்கோள் , வயல் களை கட்டல்,
அரிதல் , கடாவிடல் , அகல் குளம் குடைதல்,
வருபுனல் ஆடல் , மருதக் கருப்பொருளே.
உரை
   
நெய்தலின் கருப்பொருள்
24. வருணன் , சேர்ப்பன் , விரிதிரைப் புலம்பன் ;
பரும அல்குல் பரத்தி , நுளைச்சி ;
நுளையர் , நுளைச்சியர் , பரதர் , பரத்தியர் ,
அளவர் , அளத்தியார அலைகடற் காக்கை ,
சுறவம், பாக்கம் , பெறல் ,அரும் பட்டினம் ;
உவர் நீர்க் கேணி , கவர் நீர் ; நெய்தல் ,
கண்டகக் கைதை , முண்டகம் ,அடம்பு ;
கண்டல் , புன்னை , வண்டு இமிர் ஞாழல் ,
புலவு மீன் , உப்பு விலைகளின் பெற்றன ;
நளி மீன்கோட்பறை , நாவாய்ப் பம்பை ,
விளரியாழ் , செவ்வழி ; மீன் , உப்புப் படுத்தல்,
உணங்கு , அவை விற்றல் , மீன் உணக்கல் ,புள்ளோப்பல்,
நெடுங்கடல் ஆடல் , நெய்தல் கருப்பொருளே.
உரை
   
உரிப்பொருள்
25. புணர்தலும் , பிரிதலும் , இருத்தலும் , ஊடலும்,
இரங்கலும் ,இவற்றின் நிமித்தமும் என்று ஆங்கு
எய்திய உரிப்பொருள் ஐ-இரு வகைத்தே.
உரை
   
கைகோளின் வகை
26. அளவு இல் இன்பத்து ஐந்திணை மருங்கின்
களவு , கற்பு , என இரு கைகோள் வழங்கும் .
உரை
   
களவின்கண் நிகழும் புணர்ச்சி
27. இயற்கைப் புணர்ச்சி , இடந்தலைப்பாடு,
பாங்கன் கூட்டம் , பாங்கியின் கூட்டம் , என்று
உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே.
உரை
   
கைக்கிளை நிகழும் காலம்
28. மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்,
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப.
உரை
   
கைக்கிளை இன்னதென்பது
29. அதுவே,
காமம் சான்ற இளமையோள்வயின்
குறிப்பு அறிகாறும் குறுகாது நின்று
குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும்.
உரை
   
கைக்கிளைக்கு உரிய தலைமக்கள்
30. மறையோர் , மன்னவர் , வணிகர் , சூத்திரர் , எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே.
உரை
   
31. அதுவே,
மொழிந்தோர் நால்வரும் மொழிந்த ஐந் நிலத்து உறை
இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரும் எய்துப.
உரை
   
இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணம்
32. தெய்வம் தன்னின் எய்தவும், கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி.
உரை
   
இயற்கைப்புணர்ச்சிக்கொரு சிறப்புவிதி
33. இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
முயற்சி இன்றி முடிவது ஆகும்.
உரை
   
களவொழுக்கின் கண் புணர்ச்சி நிகழும்திறம்
34. உள்ளப் புணர்ச்சியும் ,மெய் உறு புணர்ச்சியும்,
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய.
உரை
   
உள்ளப் புணர்ச்சி நிகழும் காலம்.
35. பொருவிறந்தோற்குப் பெருமையும்,உரனும்;
நல் நுதற்கு அச்சமும், நாணமும் ,மடனும்;
மன்னிய குணங்கள் ஆதலின் முன்னம்
உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும்.
உரை
   
மெய்யுறு புணர்ச்சி நிகழுங் காலம்
36. காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்,
காட்டிய பத்தும் கைவரும் எனினே,
மெய் உறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே.
உரை
   
களவுப் புணர்ச்சி நிகழும் இடம்
37. பகற்குறி , இரவுக்குறி ,எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே.
உரை
   
பகற்குறி ,இரவுக்குறி
38. இல்வரை இகந்தது பகற்குறி ; இரவுக்குறி
இல்வரை இகவா இயல்பிற்று ஆகும்.
உரை
   
களவில் பிரிவு
39. ஒருவழித் தணத்தல், வரைவு இடை வைத்துப்
பொருள்வயின் பிரிதல் , என்று இருவகைத்து ஆகும்
நிறைதரு காதல் மறையினில் பிரிவே.
உரை
   
40. ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்
உரை
   
41. வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்
இருதுவின் கண்ணுடைத்து என்மனார் புலவர்.
உரை
   
வரைவு
42. களவு வெளிப்படா முன்னும் , பின்னும்,
விளையும் நெறித்து என விளம்பினர் வரைவே.
உரை
   
43. நான்கு வகைப் புணர்வினும் தான் தெருண்டு வரைதலும்,
பாங்கனில் , பாங்கியில் ,தெருளுற்று வரைதலும்
களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும்.
உரை
   
44. உடன்போய் வரைதலும் ,மீண்டு வரைதலும்,
உடன்போக்கு இடையீடு உற்று வரைதலும்,
களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும்.
உரை
   
45. உடன்போய் வரைதல் ஒரு வகைத்து ஆகும்.
உரை
   
46. அவள் மனை வரைதலும் , தன் மனை வரைதலும்,
என மீண்டு வரைதல் இரு வகைத்து ஆகும்.
உரை
   
அறத்தொடுநிலை
47. ஆற்று ஊறு அஞ்சினும் , அவன் வரைவு மறுப்பினும்,
வேற்று வரைவு நேரினும், காப்புக் கைமிகினும்;
ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே.
உரை
   
அறத்தொடு நிற்றற்கு உரியாரும், அவர்கள் அறத்தொடு நிற்கும் நெறியும்
48. தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்;
பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும்;
செவிலி நற்றாய்க்கு அறத்தெடு நிற்கும்;
நாற்றாய் தந்தை, தன் ஐயர்க்கு அறத்தொடு
நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே.
உரை
   
தலைமகள் அறத்தொடு நிற்கும் இடம்
49. ஒருபுணர்வு ஒழிந்தவற்றும் , ஒருவழித் தணப்பவும்,
வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரியவும்,
இறைவனைச் செவிலி குறிவயின் காணவும்,
மனைவயின் செறிப்பவும் , வருத்தம் கூரின்
வினவியக் கண்ணும், வினவாக் கண்ணும்,
அன நடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும்.
உரை
   
பாங்கி அறத்தொடு நிற்கும் இடம்
50. முன்னிலைப் புறமொழி , முன்னிலை மொழிகளில்,
சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும்.
உரை
   
செவிலி அறத்தொடு நிற்கும் இடம்
51. செவிலி நற்றாய்க்குக் கவலை இன்று உணர்த்தும்
உரை
   
நற்றாய் அறத்தொடு நிற்கும் திறம்
52. நற்றாய் அறத்தொடு நிற்கும் காலைக்
குரவனும் , தன் ஐயும் , குறிப்பின் உணர்ப.
உரை
   
அறத்தொடு நிற்பார்க்குவினா நிகழும் இடம்
53. பாங்கி தலைவியை வினவும் , செவிலி
பாங்கியை வினவும் ,பாங்கி தன்னையும்
நற்றாய் தானும் வினவும் , செவிலியின்
பொற்றொடிக் கிழத்தியை உற்று நோக்கின்.
உரை
   
உடன்போக்கு நிகழ்ந்தவிடத்து அறத்தொடு நிற்றற்கு உரியார்
54. ஆங்கு உடன் போயுழி , அறத்தொடு நிற்ப
பாங்கியும் , செவிலியும் , பயந்த தாயும்.
உரை
   
கற்பு
55 களவின் வழி வந்த கற்பும் , பொற்பு அமைக்
களவின் வழி வாராக் கற்பும் என்று ஆங்கு
முற்படக் கிளந்த கற்பு இரு வகைத்தே.
உரை
   
56. குரவரின் புணர்ச்சி , வாயிலின் கூட்டம் என்று
இருவகைத்து ஆகும் கற்பில் புணர்ச்சி.
உரை
   
57. அவற்றுள்
களவின் வழிவந்த கற்பில் , புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மையான.
உரை
   
58. மறையின் புணர்ச்சியும் , மன்றல் புணர்ச்சியும்,
இறைவற்கு எய்தல் உண்டு இருவகைக் கற்பினும்.
உரை
   
59. காதல் பரத்தையர் , காமக் கிழத்தியர்,
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி , என்று
அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும்.
உரை
   
60. அவருள்
காதல் பரத்தையர் களவிற்கு உரியர்
உரை
   
61. ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர்.
உரை
   
கற்பில் பிரிவு
கற்பில் நிகழும் பிரிவின் வகை
62. பரத்தையின் பிரிதல் , ஓதற்குப் படர்தல்,
அருள் தகு காவலொடு , தூதிற்கு அகறல்,
உதவிக்கு ஏகல் , நிதியிற்கு இகத்தல் ,என்று
உரை பெறு கற்பில் பிரிவு அறு வகைத்தே.
உரை
   
பரத்தைதிற் பிரிவின்வகை
63. அயல் மனைப் பிரிவு , அயல் சேரியின் அகற்சி,
புறநகர்ப் போக்கு ,இவை புரவலற்கு உரிய
பரத்தையின் பிரியும் பருவத்தான.
உரை
   
64. கெழீஇய காமக் கிழத்தியர் பொருட்டாத்,
தழீஇய அயல் மனைத் தலைவன் பிரியும்.
உரை
   
65. பின்னர் வரைந்த பெதும்பையும் , பரத்தையும்,
இன்னியல் விழவும் ,ஏதுவாக
அவன் அயல் சேரியின் அகலும் என்ப.
உரை
   
66. விருந்து இயல் பரத்தையைப் பெருந்தேர்மிசைக் கொண்டு,
இளமரக் காவின் விளையாடற்கும்,
புனல் ஆடற்கும் ,புறநகர்ப் போகும்.
உரை
   
ஊடல்
67. ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு .
உரை
   
ஊடல் தணிக்கும் வாயில்கள்
68. கொளை வல் பாணன் , பாடினி , கூத்தர்,
இளையர் , கண்டோர் , இருவகைப் பாங்கர் ,
பாகன் , பாங்கி , செவிலி , அறிவர்.
காமக் கிழத்தி , காதல்புதல்வன்,
விருந்து , ஆற்றாமை , என்று இவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்.
உரை
   
கல்வி
69. ஓதல் தொழில் உரித்து , உயர்ந்தோர் மூவர்க்கும்.
உரை
   
70. அல்லாக் கல்வி , எல்லார்க்கும் உரித்தே.
உரை
   
71. படைக்கலம் பயிறலும் , பகடு பிற ஊர்தலும்
உடைத் தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே.
உரை
   
காவல்
72. அறப்புறம் காவல் , நாடு காவல் , எனச்
சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே.
உரை
   
73. அறப்புறம் காவல், அனைவர்க்கும் உரித்தே.
உரை
   
74. மற்றைக் காவல் , கொற்றவர்க்கு உரித்தே.
உரை
   
தூது
75. வேத மாந்தர் , வேந்தர் , என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும்.
உரை
   
76. சிறப்புப் பெயர் பெறின் செப்பிய இரண்டும்
உறற்கு உரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும்.
உரை
   
துணை
77. உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே.
உரை
   
நான்கு வருணத்தார்க்கும் உரியபிரிவு
78. பரத்தையின் பிரிவும் , பொருள்வயின் பிரிவும்,
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும்.
உரை
   
79. இழிந்தோர் தமக்கும் இவற்றுள் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் , என மொழிந்தனர் புலவர்.
உரை
   
80. கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் ,சொல்லாது அகறலும்
உரியன் கிழவோன் , பெருமனைக் கிழத்திக்கு.
உரை
   
81. சொல்லாது அகலினும், சொல்லும் பாங்கிக்கு .
உரை
   
82. குறிப்பின் உணர்த்தும், பெறற்கு அருங்கிழத்திக்கு.
உரை
   
83. காலில் சேறலும் , கலத்தில் சேறலும்,
ஊர்தியில் சேறலும் , நீதி ஆகும்.
உரை
   
84. புலத்தில் சிறந்த புரிநூன் முதல்வர்க்கு,
கலத்தில் சேறல் கடன் அன்று என்ப.
உரை
   
85. வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்,
குல மட மாதரொடு கலமிசைச் சேறலும்,
பாசறைச் சேறலும் , பழுது என மொழிப.
உரை
   
செலவு அழுங்கல்
86. ஓதல் முதலா ஓதிய ஐந்தினும்,
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும்.
உரை
   
87. இல்லத்து அழுங்கலும் , இடைச் சுரத்து அழுங்கலும்,
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே.
உரை
   
88. தலைவி தன்னையும் , தன் மனம் தன்னையும்,
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது ,
செல்வத் தோன்றல் செல்லான் அல்லன்.
உரை
   
பிரிவுக் காலம்
89. அவற்றுள்,
ஓதல் பிரிவு உடைத்து, ஒரு மூன்று யாண்டே
உரை
   
90. தூதின் பிரிவும் , துணைவயின் பிரிவும்,
பொருள்வயின் பிரிவும் , ஓர் யாண்டு உடைய.
உரை
   
பிரிதற்கு ஆகாத காலம்
91. பூத்த காலைப் புனையிழை மனைவியை,
நீராடிய பின் ஈர்-ஆறு நாளும்,
கரு வயிற்று உறூஉம் காலம் ஆதலின்,
பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன்.
உரை
   
92. ஓதற்கு அகன்றோன் , ஒழிந்து இடை மீண்டு
போதற்கு இயையவும் , புலம்பவும் , பெறாஅன்.
உரை
   
93. தூதும் , துணைமையும் , ஏதுவாகச்
சென்றோன் அவ்வினை , நின்று நீட்டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே.
உரை
   
கற்பில் தலைவி ஒழுக்கம்
94. பூத்தமை சேடியின் புரவலற்கு உணர்த்தலும்,
நீத்தமை பொறாது நின்று கிழவோனைப்
பழிக்கும் காமக் கிழத்தியைக் கழறலும்,
கிழவோன் கழறலும், வழிமுறை மனைவியைக்
கொழுநனொடு வந்து எதிர் கோடலும் ,அவனொடு
பாங்கொடு பரத்தையைப் பழித்தலும் , நீங்கிப்
புறநகர்க் கணவனொடு போகிச் செறிமலர்ச்
சோலையும் , காவும் ,மாலையங் கழனியும்,
மாலை வெள்ளருவியும் ,மலையும் ,கானமும்,
கண்டு விளையாடலும் ,கடும்புனல் யாறும்,
வண்டு இமிர் கமல வாவியும் , குளனும்,
ஆடி விளையாடலும் கூடும் கிழத்திக்கு.
உரை
   
வாயில்கள்
பாணன்
95. வாயில் வேண்டலும், வாயில் நேர்வித்தலும்,
சேயிழை ஊடல் தீர்த்தலும் , போயுழி.
அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் , அவன்வயின்
செல்ல விரும்பலும் , சென்று அவற்கு உணர்த்தலும் ,
சொல்லிய கூற்று எனச் சொல்லலும் , கிழவோன்
வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும்,
அணிநலம் பெற்றமை அறியான் போன்று அவள்
பணிவொடு வினாதலும் ,பாணற்கு உரிய.
உரை
   
விறலி
96. செலவில் தேற்றலும் ,புலவியில் தணித்தலும்,
வாயில் வேண்டலும் , வாயில் நேர்வித்தலும்,
தெரியிழை விறலிக்கு உரிய ஆகும்.
உரை
   
கூத்தர்
97. செல்வம் வாழ்த்தலும் , நல் அறிவு கொளுத்தலும்,
கலன் அணி புணர்த்தலும், காமம் நுகர்பு உணர்த்தலும்,
புலவி முதிர்காலைப் புலம்கொள ஏதுவில்
தேற்றலும் , சேய்மை செப்பலும் , பாசறை
மேற்சென்று உரைத்தலும் , மீண்டு வரவு உணர்த்தலும் ,
கூற்றரு மரபில் கூத்தர்க்கு உரிய.
உரை
   
இளையோர்
98. மடந்தையை வாயில் வேண்டலும் , வாயில்
உடன்படுத்தலும் , அவள் ஊடல் தீர்த்தலும்,
கொற்றவற்கு உணர்த்தலும், குற்றேவல் செய்தலும்,
சென்று முன் வரவு செப்பலும் , அவன் திறம்.
ஒன்றி நின்று உரைத்தலும் ,வினைமுடிவு உரைத்தலும்,
வழி இயல்பு கூறலும் ,வழியிடைக் கண்டன
மொழிதலும், இளையோர் தொழில் என மொழிப.
உரை
   
கண்டோர்
99. தீது உடைப் புலவி தீர்த்தலும் ,அவன் வரல்
காதலிக்கு உரைத்தலும் ,கண்டோர்க்கு உரிய.
உரை
   
பார்ப்பனர்
100. இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலை எடுத்து உரைத்தலும்,
செலவு அழுங்குவித்தலும், செலவு உடன் படுத்தலும்,
பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய.
உரை
   
சூத்திரப் பாங்கர்
101. நன்மையின் நிறுத்தலும் ,தீமையின் அகற்றலும்,
சொன்னவை பிறவும் சூத்திரர்க்கு உரிய.
உரை
   
பாகன்
102. சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்,
வாயில் நேர்வித்தலும் , வயங்கு துனி தீர்த்தலும்,
வினை முடித்ததன் பின் வியன்பதி சேய்த்து என
இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே.
உரை
   
பாங்கி
103. பிரிவுழி விலக்கலும் ,பிரிவு உடன் படுத்தலும்,
பிரிவுழித் தேற்றலும் , பிரிவுழி அழுங்கலும்,
பிறவும் , உரிய இறைவளைப் பாங்கிக்கு.
உரை
   
செவிலி , அறிவர்
104. முன்வரு நீதியும் , உலகியல் முறைமையும்,
பின்வரும் பெற்றியும், பிறவும் , எல்லாம்
தெற்று எனக் கூறல் செவிலித் தாயக்கும்,
உற்ற அறிவர்க்கும் உரிய ஆகும்.
உரை
   
காமக்கிழத்தியர்
105. குடிப் பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்,
மனைவியைப் பழித்தலும் ,வாடா ஊடலுள்
தலைவன் கழறலும் , மனைவிக்கு அமைந்த
ஒழுக்கமும்,காமக்கிழத்தியர்க்கு உரிய.
உரை
   
பரத்தையர்
106. கிழவோன் தன்னையும் , கிழத்தி தன்னையும்,
இகழ்தலும் , தம்மைப் புகழ்தலும் , நிகழ்பொருள்
காத்தலும் , பரத்தையர் கடன் என மொழிப,
உரை
   
107. பரத்தையர் , காதல் பரத்தையைப் புகழ்தலும்,
தம்மை இகழ்தலும் தம்முளும் கூறுப.
உரை
   
இளையர்
108. இளையர் கிழவோற்கு இரவும், பகலும்,
களைதல் இல்லாக் கவசம் போல்வார்.
உரை
   
பாங்கர்
109. இருவகைப் பாங்கரும் , ஒருபெருங் குரிசிற்கு
இன் உயிர்த் துணையா , இருபெருங் குரவரும்
தன்னை அளித்த தகைமையோரே.
உரை
   
தோழி
110. தோழி , செவிலி மகளாய்ச் சூழ்தலோடு
உசாத்துணை ஆகி ,அசாத் தணிவித்தற்கு
உரிய , காதல் மருவிய துணையே.
உரை
   
செவிலி
111. செவிலி, நாற்றாய் தோழி ஆகி
அவலம் நீக்கி அறிவும், ஆசாரமும்,
கொளுத்தித் தலைவியை வளர்த்த தாயே.
உரை
   
அறிவர்
112. அறிவர் கிழவோன் , கிழத்தி , என்று இருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்.
உரை
   
காமக்கிழத்தியர்
113. ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
வரு , குலப் பரத்தையர் மகளிர் ஆகிக்.
காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர்.
உரை
   
காதல் பரத்தையர்
114. யாரையும் நயவா இயல்பில் , சிறந்த
சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக்
காதலில் புணர்வோர் காதல் பரத்தையர்
உரை
   
115. அவருளும் வரைதற்கு உரியோர் உளரே.
உரை
   
116. மக்களொடு மகிழ்ந்து , மனையறம் காத்து,
மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழித்
தலைவனும் ,தலைவியும் தம் பதி நீங்கித்
தொலைவு இல் சுற்றமொடு துறவறம் காப்ப.
உரை