நெய்தற்குமக்கள்பெயர்நுளையர், நுளைச்சியர் என்பன; அவருள்
தலைமக்கள் பெயர் சேர்ப்பன், துறைவன் கொண்கன் என்பன. பிறவும்
அன்ன.
இனி, நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருட்படல 18, 20 ஆம்
நூற்பாக்களில் உரைப்பன பின்வருமாறு:
முல்லைக்கு உணா வரகும் சாமையும் முதிரையும். மா-உழையும்
புல்வாயும் முயலும். மரம்-கொன்றையும் குருந்தும். புள்-கானங்கோழியும்
சிவலும். பறை-ஏறு கோட்பறை. செய்தி-நிரைமேய்த்தலும் வரகு முதலிய
களைகட்டலும் கடாவிடுதலும். யாழ்-முல்லையாழ். "பிறவும்" என்றதனால்
பூ-முல்லையும் பிடவும் தளவும் தோன்றியும்; நீர்-கான்யாறு; ஊர்-பாடியும்
சேரியும் பள்ளியும்.
குறிஞ்சிக்கு உணா ஐவன நெல்லும் தினையும் மூங்கில் அரிசியும்.
மா-புலியும் யானையும் பன்றியும். மரம்-அகிலும் ஆரமும் தேக்கும் திமிசும்
வேங்கையும். புள்-கிளியும் மயிலும். பறை - முருகியமும் தொண்டகப்
பறையும். செய்தி-தேன் அழித்தலும் கிழங்கு அகழ்தலும் தினை முதலிய
விதைத்தலும் கிளிகடிதலும். யாழ்-குறிஞ்சி யாழ். "பிறவும்" என்றதனால்,
பூ-காந்தளும் வேங்கையும் சுனைக்குவளையும்; நீர்-அருவியும் சுனையும்;
ஊர் சிறு குடியும் குறிஞ்சியும்.
பாலைக்கு உணா ஆறு அலைத்தனவும் சூறை கொண்டனவும்.
மா-வலி அழிந்த யானையும் புலியும் செந்நாயும். மரம்-வற்றின இருப்பையும்
ஓமையும் உழிஞையும் ஞெமையும். புள்-கழுகும் பருந்தும் புறாவும்.
பறை-சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும். செய்தி-ஆறலைத்தலும்
சூறைகோடலும். யாழ்-பாலையாழ். "பிறவும்" என்றதனால், பூ-மராவும்
குராவும் பாதிரியும்; நீர்-அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் பறந்தலை.