பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-22                               171


 

 என இவ்வைங்குறுநூற்றுள், பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவியொடு
 வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்பு
 உணர்ந்ததூஉம் முறையே நெய்தல் திணையொடு முதலும் உரிப்பொருளும்
 மயங்கி வந்தன.

 ஒழிந்தனவும் இவ்வாறே மயங்குமாறு வந்துழிக் காண்க. 22

விளக்கம்

     "கருங்கால்வேங்கை"-

     "வேங்கைப் பூக்கள் விழுந்த பாறை புலிக்குட்டி போலக் காட்சி
 வழங்கும் காட்டுவழியே இரவுக்குறிக்கு வரும் தலைவன்திறத்தில் நெடிய
 வெள்ளிய நிலவே! நீ நல்லை அல்லை" என்ற தோழி முன்னிலைப்
 புறமொழியாக உரைத்த பாடலில், வேங்கை பூத்து உகும் காலம் வேனில்
 ஆதலின், புணர்ச்சியைக் கூறும் குறிஞ்சிக்கண் பாலைக்கு உரிய வேனில்
 வந்தவாறு.

     "தாமரைக்கண்ணியை"-

     "தாமரைக்கண்ணி சூடித் தண்ணறுஞ்சாந்தணிந்து தலைவியின்
 குறியிடத்து இரவு வருவையாயின், மணம் வீசும் மலையில் இருந்து
 பலிபெறும் கடவுள் என்று நின்னைக் கண்டோர் அஞ்சுவர்" என்று "தோழி
 தலைவனை இரவுக்குறி விலக்கும் குறிஞ்சிக்கலித்தாழிசையில், மருதத்திற்கு
 உரிய தாமரைப்பூக் குறிஞ்சிக்கண் வந்தவாறு.

     "அறியேம் அல்லேம்"-

     "வண்டினம் மொய்க்குமாறு சந்தனமணம் கமழும் நின் மார்பு, பரத்தை
 தலையிற்சூடிய பூக்களின் நறுமணம் கமழ்தலால், நின் புறத்தொழுக்கத்தினை
 அறிந்தோம்" என்று கூறியஇக் குறிஞ்சிக் குறுநூற்றுப் பாடலில்,
 புறத்தொழுக்கிற்குரிய மருதநிலமும், நறியோள் வண்டு முதலிய
 கருப்பொருள்களும்" தலைவி ஊடலாகிய உரிப்பொருளும் மயங்கி வந்தவாறு.