வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் வகைகளாமாறு-
தலைவன் தான் பிரியக்கருதிய செய்தியைத் தோழிக்கு அறிவுறுத்தலும்,
தோழி பிரிவுக்கு உடன்படாமல் கூறலும், தலைவன் தோழியைத்
தன்பிரிவுக்கு உடன்படுத்தலும், தோழி தலைவன் பிரிவுக்கு உடன்படுதலும்,
தலைவி தலைவன் பிரிந்தவழிக் கலங்கலும், தோழி தலைவியை வற்புறுத்திக்
கூறலும், தலைவி மிக்க பொறுமையுடன் இருத்தலும், தலைவன் வருங்காலம்
நீட்டித்தவழித் தலைவி கலங்குதலும், தலைவன் வந்தஅளவில் தலைவி
மகிழ்தலும் என்று ஒன்பதாம்.
வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரிகளாவன-
தலைவன் தான் வரைவு இடைவைத்துப் பொருள் வயின் பிரியக்கருதிய
செய்தியைத் தலைவிக்கு உணர்த்துமாறு தோழியை வேண்டலும், அவன்
பொருள்வயின் பிரியக் கருதிய செய்தியை அவனையே தலைவிக்கு
உணர்த்துமாறு தோழி வேண்டுதலும், தான் காலம் தாழ்த்தாது மீண்டு
வருவதாகக் கூறித் தலைவன் நீங்குதலும், தோழி தலைவிக்குத் தலைவன்
பொருள்வயின் பிரிவை உணர்த்துதலும், தலைவி மனம் வருந்துதலும்,
தோழி தலைவியின் வருத்தம் புறத்தார்க்குப் புலனாகும் என்றாற்போலக்
கொடுஞ் சொல்கூறலும், தலைவி தன்னை இடித்துரைக்கும் தன் தோழியிடம்
கொடுஞ்சொல் கூறுதலும், தலைவன் விரைவில் மீண்டுவருவான் என்று
தோழி வற்புறுத்திக் கூறலும், தலைவன் குறித்த பருவம் வந்தவிடத்துத்
தலைவி பிரிதல் துன்பத்தால் நோதலும், தலைவியிடம் தோழி காலம்
அல்லாக் காலத்து முந்திப் பொழிந்தது மழை என்று கூறலும், தோழி
கூறியதைத் தலைவி மறுத்துக் கூறலும், தலைவனுடைய தூதாகி மேகம்
அப்பொழுது வந்தது என்று தலைவிக்குத் தோழி கூறலும், தலைவி
பிரிவினை ஆற்றி இருத்தலும், தான் பிரிந்து சென்ற அவ்விடத்தில்
தலைவியின் பிரிவினை ஆற்றாமல் தலைவன் புலம்புதலும், வினை முற்றி
மீண்டு வந்த காலத்துத் தேர் ஊர்ந்து வரும் தலைமகன் பாகனுக்குக்
கூறுதலும், மேகத்