தொடு கூறுதலும், தன் வரவினைத் தலைவிக்கு அறிவுறுத்தலுக்குத்
தலைவன் ஊதிய சங்கு முழக்கத்தைத் தோழி கேட்டுத் தலைவிக்கு அவன்
வரவை அறிவுறுத்தலும், தலைவன் ஊதிய வலம்புரிச்சங்கினைத் தலைவி
வாழ்த்தலும், தலைவன் வந்தவிடத்து "பிரிந்த காலத்து நீவிர் அவளை
நினைத்தது உண்டோ?" எனத் தோழி அவனை வினவுதலும், தலைவியை
நினைத்ததைத் தலைவன் கூறுதலும், தோழி தலைவியைத் தான்
ஆற்றுவித்துஇருந்த அருமை கூறலும் ஆகிய இருபத்தொன்றுமாம்.
வரைவு
வரைவு இடைவைத்துப் பொருள் வயின் பிரிந்த தலைவன் வந்துழி
வரைவு நிகழும். வரைவாவது தலைமகன் தலைமகளைக் குரவரும்,
அவரோடு ஒரு தன்மையார் ஆகிய தாயத்தாரும், தாயொடு பிறந்தாரும்,
அவர் இல்லாதவழிச் சான்றோரும், தேவரும் கொடுப்பவும் கொடாது
ஒழியவும், அங்கியங்கடவுள் அறிகரியாக மணந்து கொள்ளுதலாம். வரைவு
கற்பிற்கு ஒருதலையாக வேண்டப்படுவதாகும்.
வரைவின் கிளவித்தொகைகளாவன - வரைவு மலிவு (திருமணம் பற்றிய
செய்திகளின் மிகுதி), அறத்தொடு நிலைஎன்ற இரண்டுமாம்.
வரைவு மலிவு
திருமணச் செய்திகளின் மிகுதிபற்றிக் கூறுதல் என்பது. அதன்
வகைகளாவன-திருமணத்திற்குத் தலைவன் முயலுதலை உணர்த்துதலும்,
தலைவன்தமரைத் தலைவிதமர் எதிர் கொண்டதை உணர்த்துதலும்,
திருமணச் செய்தி அறிந்து தலைவியும் தோழியும் மகிழ்தலும், தலைவி
தெய்வத்தை வழிபடுதலைக்கண்டு தலைவன் மகிழ்தலுமாகிய நான்குமாம்.
வரைவு மலிவின் விரிகளாவன - தலைவன் பரிசுப்பொருளைத் தமர்
வாயிலாக அனுப்பி வைத்த செய்தியைத்