தோழி தலைவிக்கு உணர்த்தலும், தன்னைப் பெற்ற தாய்க்கு
ஏற்படக்கூடிய
மனமகிழ்ச்சியைத் தலைவி நினைத்துப் பார்த்தலும், தலைவன் தலைவியை
மணந்துகோடலைத் தலைவிதமர் ஏற்றுக்கொண்ட செய்தியைத் தோழி
தலைவிக்கு உணர்த்துதலும், தலைவி தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக்
கொள்ள இயலாமல் மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொள்ளுதலும்,
தலைவனைத் தோழி வாழ்த்துதலும், திருமணத்தின் பொருட்டுக்
கொற்றவையைத் தலைவி வழிபடும் நிலைமையைத் தலைவனுக்குத் தோழி
காட்டுதலும், அதனைக்கண்ட தலைவன்
மகிழ்தலும் என்ற ஏழுமாம்.
அறத்தொடு நிற்றல்
உண்மை கூறலும், தக்கதனைச் சொல்லி நிற்றலும், கற்பின்தலை
நிற்றலும் அறத்தொடுநிலை என்பதன் பொருளாம்.
அறத்தொடு நிலையின் வகைகளாவன-முன்நின்று நேராகச்
சொல்லுதலும், முன்நின்று புறமொழியாகப் பொதுப்படக்கூறலும்
என்ற
இரண்டாம்.
அறத்தொடு நிற்றலின் விரிகளாவன-தலைவியைத் தலைவன்பிரிவு பற்றி
ஆற்றிச் செயலற்ற தோழி அவள் கண்ணீரைத் துடைத்தவழித் தலைவி
தான் கலங்கி அழுதற்குரிய கரணங்களை அவட்குக் கூறுதலும், தலைவன்
தெய்வத்தின்மேல் ஆணையிட்டுத் தன்னைத் தெளியச் செய்யத் தான்
அதனை மெய் என்று துணிந்தமையைத் தலைவி தோழிக்குக் கூறுதலும்,
தலைவன் தன்னைப் பிரிந்த செய்தியைத் தலைவி தோழிக்குக் கூறுதலும்,
அதுகேட்ட தோழி தலைவன் பண்புகளைப் பழித்துக்கூறுதலும், தலைவன்
நற்குணம் உடையவன் என்று தோன்றத் தலைவி கூறுதலும், "தலைவன்
குறித்துச் சத்தியம் செய்து தவறியதைப் பொறுக்கும்படி தெய்வத்தை
வழிபடுதற்குச் செல்வோம்" என்று தலைவி தோழிக்குக் கூறுதலும், புறத்தே
போகாதபடி வீட்டின்கண் தன்னைத்