அன்பு காட்டுமாறு அருள்செய்யத் தெய்வத்தை வேண்டலும், தலைவி
செல்லும் பாலைநிலம் வெப்பம்மாறி மருதநிலமாக அவளுக்கு அமையச்
செய்யுமாறு நற்றாய் சூரியனை வேண்டலும், மலரை மிதிப்பினும் பொறாத
தலைவியின் மெல்லடிகளின் தன்மைகருதி இரங்கலும், உலகியல் அறியாத
தலைவியின் இளமைத் தன்மையை நினைத்து இரங்குதலும், தலைவியின்
இயல்பான அச்சத்தன்மையை நினைத்து இரங்குதலும், நற்றாயும்
ஆயத்தாரும் படும் துயரை நோக்கிக் கண்டோர் இரங்கிக் கூறுதலும்,
தலைவியின் பிரிவினை ஆற்றாது வருந்திய நற்றாயைச் செவிலி
தேற்றுவித்தலும், செவிலி தலைவியைத் தேடிச்சென்ற வழியில் முக்கோலை
உயர்த்தி வந்த அந்தணரைக்கண்டு தலைவியைப்பற்றி வினாதலும்,
வழியிடைக் கண்ட மாவிரதியரிடம் தலைவியைப்பற்றிச் செவிலி வினாதலும்,
அச்சான்றோர்கள் "தலைவி செயல் தக்கதே" என்று காரணம் காட்டி
விளக்குதலும்,செவிலி சுரத்திடைக்கண்ட எயிற்றியோடு வருந்திப்பேசுதலும்
குராமரத்தோடு புலம்பலும், புறாக்களோடு வருந்திக் கூறலும், சுரத்திடையே
தலைவன்தலைவியரின் அடிச்சுவடு கண்டு அவர்தம் செலவுக்கு வருந்துதலும்,
தன்னை நோக்கிவந்த இருவராகிய தலைவன் தலைவியரை நோக்கி
"என்மகளையும் அவள் காதலனையும் இடையே கண்டீரோ?" என்று
வினவுதலும், அவர்கள் செவிலியைத் தேற்றி மீண்டு செல்லுமாறு கூறுதலும்,
தலைவியைக்காணாது செவிலி கவலைமிகுதலும்ஆம்.
மீட்சி
உடன்போன தலைவனும் தலைவியும் தம்ஊருக்குத் திரும்பி வருதல்
என்பது.
தெளிவித்தல், மகிழ்ச்சி, வினாவுதல், விடையிறுத்தல் என்ற நான்கும்
மீட்சியின் வகைகளாம்.
மீட்சியின் விரிகளாவன - தலைவியைத் தேடிச்சென்ற செவிலித்தாய்
அவள் தலைவனுடன் நெடுந்தொலைவு சென்று