பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               81


 

உணர்த்த உணரும் ஊடல்

     தலைவன் தெளிவித்தவழி மாறிவிடும் கோபம் என்பது.

     உணர்த்த உணரும் ஊடற்கு உரிய துறைகளாவன - தலைவன்
 பரத்தையிற் பிரிந்தவழி அதனை அறிந்த மக்கள் "இது தலைவி ஊடல்
 கொள்ளுதற்கு வாய்ப்பினை அளிக்கும்" என்று கூறுதலும், தலைவன்
 பிரிதலான் தனித்து இருக்கும் நிலை ஏற்பட்டவழித் தலைவி
 இல்வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு அழுது வருந்துதலும், தலைவியின்
 வருத்தத்திற்குக் காரணத்தி தோழி வினவுதலும், தலைமகன் புறத்தொழுக்கம்
 உடையன் ஆயின செய்தியைத் தலைவி உணர்த்தலும், உலகியல்
 உரைத்துத் தலைவியைப் பாங்கி இடித்துக் கூறலும், தலைவி பூப்பு
 எய்தியவழிச் செவ்வணி அணிந்த சேடியைத் தலைவன்பால் அனுப்பவே,
 செவ்வணி அணிந்து செல்லும் சேடியைக்கண்டு அயலார் வருந்திக்
 கூறுதலும், செவ்வணி அணிந்து வரும் சேடியைக் கண்ட பரத்தையர்
 தலைவன் தம்மை நீத்துத் தலைவிபால் பிரி்ந்து விடுவானே என்ற
 ஆத்திரத்தால் தலைவியைப் பழித்துக் கூறலும், "தலைவி பூப்பு நீராடிய
 பின் ஈராறு நாளும் தலைவன் தலைவியோடு இருத்தல் வேண்டும்" என்ற
 உலகியல் விதியை உட்கொண்டு தலைவனைத் தலைவிபால் செல்ல
 விடுத்தவழித் தலைவன் இல்லம் நோக்கி வருதலைக்கண்டு வாயில்கள்
 தலைவிக்கு அவன் வரவு உணர்த்தலும், தலைவன் வருகையை உணர்ந்து
 தோழி தலைவிக்கு உணர்த்தலும், தலைவி தலைவனை எதிர்ஏற்றுக்கொண்டு
 பணிதலும், கூடுதலும், மகிழ்தலும் என்பனவாம். தலைவி தனித்துழி
 இரங்கலின்பின் அவள் தலைவனைக் கனவில் கண்டு வருந்துதலும்,
 தலைவன்திறம் நோக்கிக் கதிரவனோடு நொந்து கூறுதலும், தலைவனைப்
 பரத்தையருக்கு முற்றூட்டாகத் தலைவி தான் வழங்கிவிட்டதாக அவன்
 அன்பின் திரிபினை எடுத்துக் கூறலும், உணவு சமைத்துவைத்தபின் அதனை
 உண்ணுதற்குத் தலைவன்