பக்கம் எண் :

900இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

என

    என்நிலையைக் கூறிவிட்டேன் சான்றோர்களே! நன்னிலையிலிருந்து
வழுவிய அரசனைச் சான்றோர் மீண்டும் நன்னிலைக்கு உயர்த்துவதுபோல
என்னைத் துயர் தீர்த்து மற்றவரைப் போலச் செய்வது உங்கள் கடமை
ஆகும்”. இப்பாடல் மடல் ஏறியவன் கூறியது.

‘உளைத்தவர் கூறும்’--

     ‘வருந்துவார் யாதாயினும் கூறுக. இளைய மகளிருக்கு நம் தலைவன்
மூப்புப் பழங்கள்ளைப் போன்ற களிப்புத் தரும்’--இது தலைவன் மூத்த
பின்னும் துறவின்கண் மனம் செலுத்தாது அதனைக் காமத்தின்கண்
செலுத்தியது.

‘அரும்பிற்கும் உண்டோ’--

    “விறலியே! கோபிக்காதே! அரும்பிற்கு மலர்ந்த பூவின் நறுமணம்
வருமா? தலைவனுக்கு வயது முதிர்ந்த மகளிரின் தழுவுதல் அமுதம்
போன்ற சுவை தருவதாம்”--இது தலைவனை வயது மூத்த மகளிர் கூடுதல்
கூறுதலின், பெருந்திணை ஆயிற்று. -- இவை இரண்டும் இளமை தீர்திறம்.

    புகுமுகம் புரிதல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாகிய 12 மெய்ப்பாடும்
புணர்ச்சிக்கு முன்னும், பாராட்டெடுத்தல் முதல் கையறவு உரைத்தல்
ஈறாகிய 12 மெய்ப்பாடும் புணர்ச்சிக்குப் பின்னும் நிகழ்வனவாய்
அகத்திணைத் தலைவிக்கு உரியன. இவை ஒவ்வோரவத்தைக்கும்
நந்நான்காய் ஆறு அவத்தைகளுக்கு உரியன.

    கையறவு உரைத்தலுக்கு மேல் உள்ள நிலை--மன்றத்து இருந்த சான்றவர் அறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியும் பிறவும் கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறலாம். அந்நிலையே தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாம்.