இது மேற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ - ள்.) வெட்சியும் உழிஞையும் முறையே நிரைகோடலாகிய ஒரு தொழிலேயன்றி அதன்மறுதலைத் தொழிலாகிய நிரைமீட்டலும், எயிலழித்தலாகிய ஒரு தொழிலேயன்றி அதன் மறுதலைத்தொழிலாகிய எயில் காத்தலுமாகிய வேறுபட்ட தொழில்களை உடைமையின் அவ் வேறுபட்ட தொழிற்கண்முறையே அஞ்சுதலுடைய கரந்தையும் நொச்சியுஞ் சூடுதல் அமைதிபெற்ற பழைய நெறியாம், எ - று.(3) [2. சிறப்பு] 1. வெட்சித் திணை 602. அவற்றுள் வெட்சி தானே குறிஞ்சியது புறனே யுட்குவரப் பொருபோ ருறுமுறை தொடங்கிய வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி னாதந் தோம்பலு மந்நிரை மீட்டலு மெனவிரு பாற்றே யஃதென மொழிப. * இது வெட்சித்திணை, குறிஞ்சித்திணைக்குப் புறனென்பதூஉம் அதன் பொருட்டிறனுங் கூறுகின்றது. (இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் வெட்சித்திணை முற்கூறிய அகத்திணை ஏழனுட்குறிஞ்சித்திணைக்குப் புறனாம். அச்சந் தோன்றப் பொரும்போரைத் தனக்குரிய அறநெறியால்எடுத்துக்கொண்ட வேந்தனால் விடப்பட்ட முனைப்புலங்காத்திருக்குந் தண்டத் தலைவர் பகை நிலத்துச் சென்று களவினாலே ஆநிரையைக் கைக்கொண்டு போந்து மீளாமற் பாதுகாத்தலும், நிரைகோட் கேட்டவேந்தனால் விடுக்கப்பட்ட தண்டத்தலைவர் அந்நிரையினை மீட்டலுமென இரண்டுவகையினை யுடைத்தாம்மேற்கூறிய அத் திணை, எ - று. கவர்ந்தோர்க்கு மறுதலையராகிய மீட்டோர் வருவித்துரைக்கப் பட்டது. 'அவற்றுள்' என்பதனைமேல் இவ்வாறு வருவனவற்றிற் கெல்லாம் உய்த்துரைத்துக்கொள்க. * தொல். புறத். 1- 5 (பி - ம்) இ. வி.-21 |