பக்கம் எண் :

 320

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     திருமால் ஒரே அடியால் அளந்து அகப்படுத்திய நில வுலகத்தை அரிதின்
 வென்று அதன்கண் தன் புகழ் பரப்பிச் சோழ மன்னன் அரிதின் காப்பாற்றுகிறான்
 என்று பழிப்பது போலக் கூறி, திருமால் அளந்த நிலவுலகம் முழுவதற்கும் அவனே
 செங்கோல் மன்னன் எனக் குறிப்பால் புகழ்ந்தவாறு காண்க.

     இப்பாடலில், திருமால் வெளிப்படையாகப் புகழப்படச் சோழன்
 வெளிப்படையாகப் பழிக்கப்பட்டவாறு.]

    "நினைவுஅரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர்
     அனைவரையும் புல்லினாள் அன்றே, - மனுநூல்
     புணர்ந்த நெறிஒழுகும் பூழிய!நீ இந்நாள்
     மணந்த மரைமலர்மேல் மாது."

 இதுவும் அது.

     [மனுநீதி கூறும் முறைப்படிச் செங்கோல் செலுத்தும் சோழனே! நீ இன்று
 உனக்கு உரிமையாகப் பெற்றுள்ள செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்,
 எல்லையற்ற புகழை உடைய உன் குலத்து முற்பட்ட மன்னர் அனைவரையும் முன்பு
 கூடினவள் அல்லளோ? - என்ற இப்பாடலில்,

     பலரும் மணந்த ஒருத்தியைச் சோழன் தானும் மணந் துள்ளான் என்று பழிப்பது
 போலக் கூறி, பரம்பரையாகச் செல்வக்குடியில் பிறந்து கருவிலே திருவுடையவன்
 சோழன் என்ற புகழ்ச்செய்தியைக் குறிப்பால் பெறப்பட வைத்தவாறு காண்க.]

     மேற்கூறிய இலேசத்தின் பாற்படும் பழிப்பது போலும் புகழ் புலப்படுத்தலோடு
 இப்புகழாப் புகழ்ச்சிக்கும், புகழ்வது போலப் பழித்திறம் புனைதலோடு
 மேற்கூறிய மாறுபடு புகழ்நிலைக்கும் வேற்றுமை யாதோ எனின், பழிப்பதுபோலப் புகழ்
 புலப்படுத்தல் ஒன்றனையே பழிப்பதுபோலப் புகழ்வது. புகழ்வது