பக்கம் எண் :

 334

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     "ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்து ஒற்றி "                  - அகநா. 5 

 என்பது குறிப்புநிலை; என்னை? தலைமகன் போக்கினை உவக்கும் குறிப்பு அல்லாத
 குறிப்பு ஆகலின் அஃது அணியெனப்படும்.

     "தும்முச் செறுப்ப அமுதாள் "                              - கு. 1318 

 என்பது புலவியுள் அழுத மங்கலம்.

     "பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
      ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
      தூநீர் பயந்த துணைஅமை பிணையல்
      மோயினள் உயிர்த்த காலை "                            - அகநா. 5 

 என்பது போக்கின்கண் அழாத மங்கலநிலை.

     "விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
      நலம்மிகு சேவடி நிலமிசை வடுக்கொளாஅக்
      குறுக வந்து கூர்எயிறு தோன்ற "                         - அகநா. 5 

 என்பது, அறிவொடு படாது புலம்பு கொள வந்த செய்வினை; என்னை? கேளாது
 கேட்டாள்போல வந்தமையின். அதுவும் அலங்காரம் என்று சூத்திரம் செய்துகொள்ள
 வேண்டும், செய்யுட்கு அணிவேறு கூறின் என்பது.

     இனி, இங்ஙனம் கூறின எல்லாம் குற்றம் என்று கொள்ளப் படா; என்னை?
 பொருளதிகார முறை பெறாது பிறழ்ந்து இடை யறவுபட்ட காலை இடர்ப்பட்டுச்
 செய்தன ஆகலான் அவையும் அவ்வாற்றான் அமையும் என்பது "

- தொ. பொ. 312 பேரா. 

     இக் கூற்றான் அணி இலக்கணத்தையே ஒத்துக்கொள்ளாத பேராசிரியர்
 ஒருவாற்றான் காலத்தை ஒட்டி அதுவும் தேவைப் பட்டதே என்று அமைதிகோடல்
 உணரப்படும்.]