பக்கம் எண் :

 44

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     "பேசுங்காலை" என்றதனால், வாழ்த்து முதலிய மூன்றனுள் ஒன்றே அன்றி
 இரண்டும் மூன்றும் ஒருங்கு வரினும் இழுக்கு இன்று என்பது. "இனையன புனைந்து"
 என்றதனால், வனமும் நதியும் இருசுடர்த் தோற்றமே அன்றி, அவற்றின் அத்தமனம்
 முதலியன புனைதலும் கொள்க.

     சந்தி என்பது நாடகத்தின் கண்ணது ஓர் உறுப்பு. அஃதாவது வித்தல் விளைத்தல்
 விளைவு துய்த்தல் என்பதாம்.                                           (9) 

விளக்கம்

     சந்தியின் தொடர்ந்து என்று தண்டியாசிரியர் காப்பிய இலக்கணம்
 கூறினாராதலின், சந்தி என்னும் இலக்கணம் காப்பியத்துக்கும் உரியது. அந்நிய
 ரூபமாக முடிந்த கதைகளுக்கும் உரியது. அவை முகம், பிரதிமுகம், கருப்பம் விளைவு
 தூய்த்தல் என இவை.

     முகமாவது எழுவகைப்பட்ட உழவினால் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட
 வித்துப்பருவம் செய்து முளைத்து முடிவது போல்வது.

     பிரதிமுகமாவது அங்ஙனம் முளைத்தல்முதலாய் இலைதோன்றி நாற்றாய்
 முடிவது போல்வது.

     கருப்பமாவது அந்நாற்று முதலாய்க் கருவிலிருந்து பெருகித் தன்னுள் பொதிந்து
 கருப்பம்முற்றி நிற்பது போல்வது. விளைவாவது கருப்பம்முதலாய் விரிந்து கதிர்
 திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைவது போல்வது. துய்த்தலாவது விளையப்
 பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுப் படாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து
 கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. முளையினைக் கண்டோர் விளைவு இது
 என ஊகித்து அறிந்து கொள்ளத்தக்கதாக முதற்சந்தியாகிய முகம்
 அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.