பக்கம் எண் :

108

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
ஒற்றுமைப்படப் பற்றாசு இட்டு விளக்கினாற்போல, முதல் குறட்பாவின் இறுதிக்கண்
ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு
விகற்பத்தானும் வருவன உள ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பாவாம் எனவும்,
நேரிசை வெண்பாவே போல இரண்டாம் அடியின் இறுதி தனிச்சொல் பெற்று மூன்று
விகற்பத்தான் வருவனவும் மூன்றாம் அடியின் இறுதி தனிச்சொல் பெற்று இரண்டு
விகற்பத்தான் வருவனவும், அடிதோறும் தனிச்சொல் பெற்று வருவனவும், பிறவாற்றான்
நேரிசை வெண்பாவிற்குச் சிறிது வேறுபட்டு நான்கு அடியாய் வருவனவும் எல்லாம்
இன்னிசை வெண்பாவாம் எனவும் கொள்க.     

இரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பாவிற்குச் செய்யுள்:

 

`உருவுகண் டெள்ளாமை வேண்டும், உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து'
 
 

 - குறள் 667

 
எனவும்,

ஒரு விகற்பத்தான் வந்த குறள் வெண்பாவிற்குச் செய்யுள்:

 

`உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்'
 
 

- குறள் 395

 
எனவும்,

இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள்:

 

தடமண்டு தாமரையின் தாதா டலவன்
இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே, பொய்கடிந்து
ஊழி நடாயினான் ஊர்'
 
 

- யா. கா. 24 மே

 
எனவும்,