பக்கம் எண் :

2

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இக்காலத்தில் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்ற யாப்பு நூல்களே
பெரிதும் பயிலப்பட்டு வருகின்றன. தொல்காப்பியத்துக்கும் இந்நூல்களுக்கும்
இடைப்பட்ட காலத்தில் தமிழில் தோன்றிய யாப்பு நூல்கள் பலவாகும்.
அந்நூல்களிலிருந்து மிகப்பல நூற்பாக்கள் உரையாசிரியர்களால் மேற்கோளாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இம்மேற்கோள் நூற்பாக்களில் நூற்றுக்கணக்கானவை
நூற்பெயர் அறியப்படா நிலையினவாய் உள்ளன. இன்ன இன்ன நூல்களைச் சார்ந்தவை
என்ற குறிப்புடன் எடுத்துக் காட்டப்பட்டுள்ள நூற்பாக்களை நோக்க அவிநயம்,
காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம், நத்தத்தம், பல்காயம், மயேச்சுரம், கடிய
நன்னியம், சங்க யாப்பு, நக்கீரர் அடிநூல், நல்லாதம், நல்லாறம், நாலடி நாற்பது,
பரிமாணம், பனம்பாரம், பன்னிரு படலம், பாட்டியல் மரபு, வாய்ப்பியம் முதலிய பல
நூல்கள் தொல்காப்பியத்துக்கும் யாப்பருங்கலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்
தமிழகத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்பதனை உணர்கிறோம்.

     தொல்காப்பியம் மாத்திரை, எழுத்தியல், அசைவகை முதலாகச் செய்யுள் உறுப்பு
முப்பத்து நான்கு என்றும், ஐவகை அடிகளின்விரி அறுநூற்று இருபத்தைந்து என்றும்,
தொடை வகைகள் ஐஈராயிரத்து ஆறைஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்
குறை எழுநூற்று ஒன்பஃது என்றும் குறிப்பிடுகிறது.

     ஆசிரியம், அதன் நடைத்தாய வஞ்சி, வெண்பா, அதன் நடைத்தாய கலி, கலப்புப்
பாடல்களாகிய மருட்பா, பரிபாடல் என்ற அறுவகைப்பட்ட பாக்களே
தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளன. வெண்பாவில் நெடுவெண்பாட்டு,
குறுவெண்பாட்டு என்ற பகுப்புக்களே பெயர் சுட்டப்பட்டுள்ளன. ஆசிரியப்பாவின் சீர்,
தளை பற்றிப் பேசுமிடத்து நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா என்ற
பகுப்புக்கள் சுட்டப்படினும் அவற்றுக்குத் தனியே பெயர் குறிப்பிடப்படவில்லை.
கலிப்பா - ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என்ற நான்கு