பக்கம் எண் :

52

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

சீர் வகை
 

715. இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று
மயக்கு அற வகுத்த சீர்மூன்று ஆகும்.
 
     
இது நிறுத்தமுறையானே சீர்வகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் : இயற்சீரும் உரிச்சீரும் பொதுச்சீரும் என்று ஐயம் அற வகுக்கப்பட்ட சீர்
மூன்று வகைப்படும் என்றவாறு.

விளக்கம்

     நிறுத்த முறை - செய்யுளியல் முதல் நூற்பா. நேர் நிரை என்ற அசைகள்
தம்மொடு தாம் இயல்பாக இணைதலால் பிறக்கும் சீர்கள் எல்லாப் பாக்களுக்கும்
பாவினங்களுக்கும் பொருத்தமாக இயலுகின்ற இயற்சீர்கள் என்றும், வெண்பாவிற்கும்
வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்கும் மூவசைச் சீர்கள் உரிச்சீர்கள் என்றும்,
இவற்றைப் போலச் சிறப்புடையன அன்றிச் சிறப்பின்றி வழங்கும் நாலசைச் சீர்கள்
பொதுச்சீர் என்றும் பெயரிடப்பட்டவாறு அறிக.

ஒத்த நூற்பாக்கள்

  `ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும்
சீர்இயைந்து இற்றது சீர்எனப் படுமே.'
 
 

- தொ. பொ. 324

 
  `முழுதும்'  
 

- யா. வி. 10

 
  `இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சியை என்ப நின்ற மூன்றும்.'
 
 

- மயேச்சுரம்

 
  `குற்றுகரம் ஒற்றாக்கிக் கூன்வகுத்துச் சீர்இயற்றி
மற்றை நெடிலும் வகையுளியும் - சொற்றதன்மேல்
மேலசைச்சீர் நாட்டி அளபெடையை ஈறழித்தால்
நாலசைச்சீர்க் கில்லை நடை.'