|
168 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
மறம் - மறக்குடி மகளை மணம்பேச வேந்தன் விடுத்த தூதனிடம்
மறவன் மணம் மறுத்துப் பேசுவது.
பாண் - பரத்தையிற் பிரிந்த தலைவனிடமிருந்து வந்த பாணனிடம்
தலைவியோ தோழியோ கூறுவது.
களி - கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை
முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது.
சித்து - இரசவாதிகள் தம்முடைய திறமையைக் கூறுவது.
இரங்கல் - தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கி நிற்கும் நிலையைத்
தோழி கூறுவது. தலைவிதானே கூறுவதும் ஆம்.
கைக்கிளை - தலைமகளைக் காமுற்ற தலைவன் ஒருதலைக்காமத்தால்
கூறுவது.
தூது - பிரிந்த தலைவன் தலைவியர் பறவை முதலியவற்றைத் தூதாக
அனுப்புவது.
வண்டு - வண்டின் பெருமை கூறி அதனைத் தூது விடுவது.
தழை - பாங்கி தலைவன் தந்த தழையைத் தலைவியை ஏற்பிப்பது.
ஊசல் - மகளிர் ஊசலாடும் சிறப்பினைக் கூறுவது.
கொற்றியார் - வைணவச் சின்னங்களுடன் பிச்சை எடுக்க
வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது.
பிச்சியார் - பிச்சை வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட
பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன் கூறுவது.
இடைச்சியார் - இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க
வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது.
வலைச்சியார் - மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட
காமுகன் கூறுவது.
கலம்பகம் பெரும்பாலும் நூறு பாடல்களை உடையதாகவே காணப்படும். பாடல்வரையறை அடுத்த நூற்பாவில்
சொல்லப்பட்டுள்ளது.
|