கண்படைநிலை
323. ‘காலைபகல் மாலை யாழ்முறை அறத்தியல்
அமைச்சியல் அரசியல் ஏனை இயல்இசை
நாட கத்திய லோடு நான்மறை
முறையே எய்தினை ஊழி வாழி
இனிய மகளிரோடு இன்பத்துயில் கொள்கென்று
இங்ஙனம் உரைப்பது கண்படை ஆகும்.’
துயில்எடைநிலை
324. ‘கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
தந்த திறையரும் தாராத் திறையரும்
ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
அதுவே மன்னர் துயில்எடை நிலையே.’
விளக்குநிலை
325. ‘துளக்கம்இல் மன்னர்க்கு ஆம்விளக்கு உரைப்பது
விளக்கு நிலையென வேண்டினர் புலவர்.’
கடாநிலை
326. ‘கொற்றவை தனக்குக் கொற்றவர் எறியும்
கடாநிலை உரைப்பது கடாநிலை ஆகும்.’
327. ‘வடாஅதுறை கன்னிக்கு மன்னவர் எறிந்த
கடாநிலை உரைப்பது கடாநிலை ஆகும்.’
- பெருங்குன்றூர்கிழார்
யாண்டுநிலை
328. ‘வையக மன்னவன் மன்னுக பல்யாண்டு
எய்துக என்பது யாண்டுநிலை ஆகும்.’
(இது பெரும்பான்மை நேரிசை வெண்பாவானும் சிறுபான்மை ஏனைய பா,
பாவினங்களானும் பாடப்பெறும்.)
|