இஃது அஃறிணைப் பன்மைப்பெயர் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: மேல் அஃறிணை ஒருமைக்கு ஓதிய பொருண்மைக்கண் ஏற்பன பற்றி வரும் வகர ஐகார ஈற்றுச்சொற்களும், அகர ஈற்றுச்சொற்களும், சுட்டாமெழுத்துக்களைப் பொருந்திய வகர ஈற்றுச் சொற்களும், கள் என்னும் விகுதியை ஈறாக உடைய சொற்களும், ஒன்றை ஒழித்த ஏனை எண்ணப்படும் பொருள்மேல் நிற்கும் சொற்களும், உள்ள என்பது முதலிய எட்டும், இவை போல்வன பிறவும் அஃறிணைப்பன்மைப்பாற்கு உரிய பெயர்களாம் என்றவாறு. வரலாறு: எவை- ஏவை- யாவை- அவை- இவை- உவை- நெடியவை- குறியவை- கரியவை- செய்யவை- நல்லவை- தீயவை எனவும், குழையன- குழைய- புறத்தன - புறத்த- மூலத்தன- மூலத்த- கோட்டன- கோட்ட- கரியன- கரிய- ஊணன- ஊண எனவும் அவ்- இவ்- உவ் எனவும், ஆக்கள்- குதிரைகள்- தெங்குகள்- கடல்கள்- மலைகள் எனவும், இரண்டு- பத்து- நூறு- ஆயிரம் எனவும், உள்ள- இல்ல- பல்ல- சில்ல- உள- இல- பல- சில எனவும் வரும். ‘பிற’ என்றதனானே, பல்லவை, சில்லவை, உள்ளவை, இல்லவை, உள்ளன, இல்லன, பிற, மற்றைய, மற்றையன என்றாற்போல்வனவும் கொள்க. |