598இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

நற்றாய் சுரம் தணிவித்தல்:


பெற்றே னொடும்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
நல்தேன் மொழிஅழல் கான்நடந் தாள்முகம் நான்அணுகப்
பெற்றேன் பிறவி பெறாமல்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு
மல்தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர்வானவனே
.

திரு. 232

எனவும்,

        [ஒளிவீசும் சூரியனே! தலைவி தன்னைப்பெற்ற என்னொடு
கிளியும் வாடுமாறு. பேரறிவு மிக்குக் கொடிய பாலையை நோக்கிச்
சென்றுவிட்டாள். தன்னை அடைந்த என்னைப் பிறவிப்பிணி கெடுமாறு

செய்த சிற்றம்பலத்தானின் தில்லையில் உள்ள தேன்நிரம்பிய மலர்போல
அவள்முகம் மலரும்வகை வெப்பம் குறைந்த கதிர்களை வீசுமாறு உன்னை
வேண்டுகிறேன்.]


நற்றாய் தலைமகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல்:


தாமே தமக்குஒப்பு மற்றுஇல் லவர்தில்லைத் தண்அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும்நங் காய்எரியும்
தீமேல் அயில்போல் செறிபரல் கானில் சிலம்புஅடிபாய்
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.

திரு. 228

எனவும்,

        [நங்கையே! நான்பெற்ற பெண் ஒப்பற்ற சிவபெருமானுடைய
தில்லையிலே அனிச்சப்பூமேல் மிதித்தாலும் ‘உறுத்தும்' என்று நடுங்கி
அடிகொப்புளிக்கும் இயல்பினள். அவள், நெருப்பில் வேலை
நட்டுவைத்தாற்போல வெப்பத்தால் கொதித்த பரல்கற்கள் நிரம்பிய
பாலையிலே தன் சிலம்பு அணிந்த அடிகளை ஊன்றி நடத்தற்கு இயலுமா?.]