126

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [உவமையை உட்கொண்டு, பின் உபமேயம் அதனினும் மேதக்கதாகலின்
 உவமையை விடுத்து, அவ்வுபமேயத்திற்கு அதனையே உபமானமாகக் கூறுவது
 பொதுநீங்குவமையாம். மானே! இருண்ட மயிர்முடி சூழ்ந்த நின் ஒளியுடைய முகம்
 அழகிய சந்திரனையும் தாமரை மலரையும் விட மேதக்கது ஆதலின், தனக்குத் தானே
 உவமையாம் - என்ற இப்பாடலில் பொருளையே உவமைசெய் பொதுநீங்குவமை
 காண்க.

     இஃது ஒப்பில் உவமை எனவும் பெயர் பெறும்.- வீர. 159

     இதனை இயைபின்மையணி எனத் தனி அணியாகவும் சந்திரலோகம் கூறும்.
 வடநூலார் இதனை அநந்வயாலங்காரம் என்பர்.

    "உவமையைக் கூறி ஒதுக்கிப் பொருளை,
     உவமை யாக்கி உரைப்பது பொதுநீங்கு
     உவமை என்மனார் உணர்ந்திசி னோரே"              - மு. வி. பொ. 21 

    "அல்பொருள் புனைவுளி யாகஓர் பொருளையே
     உரைப்பது பொதுநீங்கு உவமை என்ப"                        - ச. 8] 

மாலை உவமை

     ஒருபொருட்கு உவமை ஒருங்குவரின் அவை வரு தொடர்பாய் இறூஉம் மாலை
 உவமை வருமாறு :

    "மலையத்து மாதவனே போன்றும், அவன்பால்
     அலைகடலே போன்றும், அதனுள் - குலவு
     நிலவயல மேபோன்றும், நேரியன்பால் நிற்கும்
     சிலைகெழுதோள் வேந்தர் திரு"

 என வரும்.

     [ஒரு பொருளுக்கு அமையும் உவமைகள் ஒன்றோடொன்று தொடர்புடைமை
 தோன்ற அமைப்பது மாலை உவமையாம்.