சோழனுடைய தமிழ்நாடு போன்ற இயற்கை வனப்புடைய இப்பெண்நல்லாரின் கருநெடுங்கண்கள் காதணியோடு போரிட்டு நீண்டு குமிழம்பூப் போன்ற மூக்களவும் சென்று மீளுகின்றன; மானொடு தம்மை ஒப்பிட்டுக் கொண்டு என் உள்ளத்தைக் கவருகின்றன. ஆனால் அக்கண்களைப் போன்ற கயல் மீன்கள், சேற்றில் ஊடுருவி, நெடுந்தூரம் சென்று, நீர்க் குமிழிமேல் திரும்பிப் படர்ந்து, பக்கத்தில் ஒன்றோடொன்று போரிட்டும் என் உள்ளத்தைக் கவரா - என்ற இப்பாடலில், கண்களைப்போலக் கயல்களும் குழைபொருது நீண்டு குமிழ்மேல்மறியா உழை பொருதும் என் உள்ளம் கவரா எனச் சிலேடையை அடிப்படை யாகக் கொண்டு விலக்குவமை அமைந்தவாறு.
இது தடையுவமை எனவும் பெயர் பெறும்.
"ஒப்பார் பொருவுக்கு ஒருபிழை காட்டித்
தப்பும் என்பது தடைமொழி உவமை" - வீர. உரை. 156]
ஏது உவமை வருமாறு :
"வாள்அரவின் செம்மணியும், வன்னிஇளம் பாசிலையும்
நாள்இளைய திங்கள் நகைநிலவும் - நீள்ஒளியால்
தேன்உலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல்,
வான்உலவு வில்போல் வரும்"
என வரும். (21) [ஒன்றற்கு மற்றொன்று உவமையாதற்குக் காரணத்தைக் கூறி உவமிப்பது ஏது உவமையாகும்.
சிவபெருமானுடைய சிவந்த சடையின்மேல் உள்ள பாம்பின் மணிச்செம்மையும், அவர் தலையிலணிந்த வன்னித் தழையின் பசுமையும், பிறைச் சந்திரனின் வெண்மையும், கொன்றையின் பொன் நிறமும் ஒருசேரத் தோன்றுவதால், அக்காட்சி வான வில்போலப் பலநிறத் தொகுப்பாய்த் தோற்றம் வழங்குகிறது - என்ற இப்பாடலில், சிவபெருமானுடைய சடை வானவில் போலத் தோற்றம் வழங்குதற்கு உரிய காரணம் புலப்படுத்தப் பட்டவாறு காண்க. |
|
|