184

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     ஆனால் சந்திரனைப் போன்ற சங்கம், சங்கினைப் போன்ற வெண்டாழைஇதழ்
 என நிறம் ஒன்று பற்றியே முதலில் உபமேயமாகக் கூறப்பட்ட சங்கினையே பின்னர்
 உபமானமாகக் கூறுதற்கண் சிறப்பின்மையின், அங்ஙனம் கூறுதல் ஏற்புடைத்து அன்று
 என்பது.]

     உருவகமும் உவமையும் ஓர் இனம் ஆக்கிப் புறனடைப் படுத்தமையான்,
 உருவகத்திற்கு ஓதிய இலக்கணம் உவமையும் உவமைக்கு ஓதிய இலக்கணம்
 உருவகமும் பெறுதலும் கொள்க.

    "மன்றல் குழலார் உயிர்மேல், மதன்கடவும்
     தென்றல் கரிதடுக்கும் திண்கணையம்; - மன்றலரைக்
     கங்குல் கடலில் கரையேற்றும் நீள்புணையாம்;
     பொங்குநீர் நாடன் புயம்"

 என்பது உவமைபோல அற்புதம் அடுத்துவந்த உருவகம். பிறவும் வந்தவழிக்
 கண்டுகொள்க.

     [சோழமன்னன் புயங்கள், அவன் உரிமைமகளிர் உயிர்மேல் மன்மதன் செலுத்தும்
 தென்றலாகிய யானையை, எதிர்க்கவாராது தடுக்கும் கணையமரமாம்; இரவாகிய
 கடலிலிருந்து பகலாகிய கரைக்கண் ஏற்றுவிக்கும் நீண்ட தெப்பமாம் - என்னும்
 இப்பாடலில், வியப்பொடு சிவணி வரும் தென்றல் கரி, புயக்கணையம், புயப்புணை
 என்ற உருவகங்கள் அற்புத உருவகங்களாக அமைந்தமை காண்க.]

     இனி, பண்புபற்றி உவமிக்குங்கால்,

    "கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன காயா;
     உலக மன்னவன் திருநாள் ஓளிமுடி பணிந்துநின்றவர்போல்,
     பலவும் பூத்தன கோங்கும்; பைந்துகில் முடியணிந் தவர்பின்
     உலவு கஞ்சுகி யவர்போல், பூத்தன மரவம்அங்கு ஓருங்கே" - சிந்தா. 1558