தலைவனையும் அவன் பிரிவினையும் வாழ்த்துவதுபோலப் பிரிவால் தங்கள் இறப்பு நிகழ்தல் ஒருதலை என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அவன் பிரிவை விலக்கியவாறுகாண்க.]
தலைமைக்கு விலக்கு வருமாறு;
"பொய்மை நெறிதீர் பொருளும் மிகப்பயக்கும்;
எம்உயிர்க்கும் யாதும் இடர்இல்லை; - வெம்மைதீர்ந்து
ஏக இனிய நெறிஅணிய; என்றாலும்,
போகல் ஒழிவாய் பொருட்கு"
என வரும்.
[பொய்யாகிய வழியிலிருந்து நீங்குதற்குக் காரணமாகிய செல்வமும் நிரம்பக் கிடைக்கும்; எங்கள் உயிருக்கும் நீ இனிப் பொருள்வயின் பிரிந்து போவதால் ஏதம் எதுவும் நிகழாது. நீ பிரிந்துபோகும் வழியும் வெப்பம் முதலியன நீங்கிக் கடத்தற்கு இனிய வழியாகும்; அது சேய்மையானதும் அன்று; என்றாலும், நீ பொருள்வயின் பிரியாதே - என்ற தோழி கூற்றில். பொருள்வயின் பிரிவின் தேவையும் எளிமையும் இனிமையும் அப்பிரிவு தம் உயிருக்கு ஏதம் தாராத நிலைமையும் குறிப்பிடப் படினும் தலைமை செய்து கொண்டு தலைவன் செலவைத் தடுப்பதனைக் காண்க. தலைமகற்குக் குற்றேவல் செய்யும் நிலையளாம் தோழி அவன் மேற்கொண்ட செலவைத் தடுக்க முற்படுவது தலைமையாம்.]
இகழ்ச்சி விலக்கு வருமாறு:
"ஆசை பெரிதுஉடையேம் ஆர்உயிர்மேல்; அப்பொருள்மேல்
ஆசை சிறிதும் அடைவிலமால்; - தேசு
வழுவா நெறியின் வருபொருள்மேல், அண்ணல்!
எழுவாய், ஒழிவாய் இனி"
|
|
|