முயற்சி விலக்கு வருமாறு:
"மல்அணிந்த தோளாய்ஈது என்கொலோ "வான்பொருள்மேல்
செல்க விரைந்து"என்று, உளம்தெளிந்து - சொல்லுதற்கே
ஏன்று முயல்வல்யான்;"ஏகல்நீ" என்று, இடையே
தோன்றுகிறது, என்வாயில் சொல்".
என வரும்.
["வலிமை மிக்க தோள்களை உடைய தலைவனே! சிறந்த பொருள் தேடுவதற்கு விரைந்து செல்வாயாக" என்று நின் பிரிவைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மனம் தெளிந்து சொல்லுவதற்கே நான் பலகாலும் முயல்கின்றேன். ஆனால் என்னை அறியாமல் என் வாயிலிருந்து "நீ பிரிந்து போகாதே" என்ற சொற்களே வெளிவருகின்றன. இஃது என்ன புதுமை!- என்ற தலைவி கூற்றில்- தலைவனைப் பிரிந்து செல்லுமாறு கூறவிரும்பும் தன் முயற்சியிடையே, உள்ளிருந்து, பிரிதலை விரும்பாது சொற்களும் வெளிப்பட்டுத் தன் முயற்சியை விலக்குமாறு அமைந்தமை சுட்டப்பட்டவாறு.]
பரவசவிலக்கு வருமாறு:
"செல்கை திருவுளமேல் யான்அறியேன்; "தேன்கமழ்தார்
மல்அகலம் தங்கும் மதர்விழியின் - மெல்இமைகள்
நோக்கு விலக்கும்"என நோம்இவள் தன்காதல்
போக்கி, அகல்வாய் பொருட்கு"
என வரும்.
[இவள் "நறுமணமாலையை அணிந்த நின் வளமான மார்பில் பதியும் தன் பார்வைகளை இடையறாது செலுத்த இயலாதபடி இமைகள் இமைத்துத் தடுக்கின்றன" என்று இமைகளின் செயல் குறித்து வருந்தும் இயல்பினள். இவள் நின்மாட்டுக் கொண்டுள்ள அன்பின் ஆழம் இத்தகையது. நீ இவளை விடுத்துப் பிரிந்து செல்ல முடிவுசெய்து, விடுவாயின், இவளை
|
|
|