அணியியல் - வேற்றுப்பொருள் வைப்பணி

223 

     பிறர் துயரம் கண்டு முறுவலிப்பவர் கொடியவர் ஆதலின், "கொடியார்க்கும்
 உண்டோ குணம்" எனப்பட்டது. "கொடியார்" என்ற சொல் சிலேடை நயத்தால்
 கொடியோர்களையும், கொடிகளையும் உணர்த்தியவாறு,]

     கூடா இயற்கை வருமாறு :

    "ஆர வடமும், அதிசீத சந்தனமும்,
     ஈர நிலவும் எரிவிரவும்; - பாரில்,
     துதிவகையான் மேம்பட்ட துப்புரவும், தத்தம்
     விதிவகையான் வேறு படும்"

 என வரும்.

     [குளிர்ந்த முத்துமாலையும், மிகவும் குளிர்ச்சியைத்தரும் சந்தனமும், குளிர்ந்த
 நிலவும் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வெப்பத்தைத் தருகின்றன. இவ்வுலகில்
 புகழத்தக்க வகையினால் மேம்பட்ட நுகரும் பொருள்களும் தத்தமது
 ஆகூழ் போகூழ் நிலைகளுக்கு ஏற்பட மாறுபடும் -

     என்ற இப்பாடலில், "பாரில்.........வேறுபடும்" என்ற பொதுப் பொருளால்
 "ஆரவடமும் ........ விரவும்" என்ற சிறப்புப்பொருள் விளக்கப்பட்டவாறு.

     முத்து முதலியவற்றிற்கு வெப்பம் தருந்தன்மை அவற்றின் இயல்புக்கு
 மாறுபட்டதாதலின், இது கூடா இயற்கை ஆயிற்று.]

     கூடும் இயற்கை வருமாறு:

    "பொய்உரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக்
     கைவளை சோர்ந்து, ஆவி கரைந்துஉகுவார், - மெய் வெதுப்பப்
     பூத்தகையும், செங்காந்தள்; பொங்குஒலிநீர் ஞாலத்துத்
     தீத்தகையார்க்கு ஈதே செயல்"

 என வரும்.