பிரிந்த வண்டு, அக்குவளைப் பூவினை நெருங்குகிறது - என்ற இப்பாடலில், இன்பம் நுகர்தற்கேற்ற பருவ வனப்பும் இன்பச் செவ்வியும் உடைய தலைவியைப் பிரிந்த தலைவன், பலரும் தோய்ந்து வெறுத்த நீத்த பரத்தையின் புல்லிய இன்பம் கருதி அவளை அணுகுகிறான் - என்ற கருத்து பெறப்படுத்தப்பட்டவாறு.
இப்பாடலில், சுரும்பு மேய்ந்த காவியின் குறைபடுதேன், மதுச்சேர்ந்து செல்வியுடைய வண்டாமரை, பிரிந்த வண்டு - என்ற அடையொடு சேர்ந்த வெளிப்படைப் பொருள்களும், குறிப்பாகக் கொள்ளப்பட வைத்த பலர் தோய்ந்த பரத்தையின் குறையுற்ற இன்பம், இன்பச செவ்வியும் வனப்பும் உடைய தலைவி, தலைவியைப் பிரிந்த தலைவன் - என்ற அடையொடு சேர்ந்த குறிப்புப் பொருள்களும் வெவ்வேறாக அமைந்தமை காண்க.]
அடைபொதுவாய்ப் பொருள் வேறுபட வந்தமைக்கு வரலாறு:
"உள்நிலவு நீர்மைத்தாய், ஓவாப் பயன்சுரந்து,
தண்ணளி தாங்கும் மலர்முகத்துக் - கண்நெகிழ்ந்து,
நீங்கல் அரிய நிழல்உடைத்தாய், நின்று, எமக்கே
ஓங்கியதுஓர் சோலை உளது"
என வரும்.
[இப்பாடலில் வள்ளல் சோலையாகச் சுட்டப்படுகிறான். "உள்நிலவு .........நிழல் உடைத்தாய்" என்பதுகாறும் உள்ள தொடர்கள் வள்ளலுக்கும் சோலைக்கும் பொதுவான அடைகள். வள்ளல், மனத்தில் நற்பண்புகள் கொண்டு, குறைவுறாது பிறருக்கு வழங்கி, கருணை வெளிப்படுத்தும் மலர்ந்த முகத்தில் கண்ணோட்டத்தைப் புலப்படுத்தி, ஒருகால் தன்னை அடைந்தவர் பின்னர்த் தன்னைப் பிரிய நினையாதபடி கருணை செய்பவன; சோலை, உள்ளே ஈரப்பசை உடையதாய், குறைவுறாது பழங்களை நல்கி, தண்ணிய வண்டுகள் மொய்க்கும் பூக்களில் தேனை வெளிப்படுத்தி, தன்னுள் வந்தவர் பின் தன்னை விடுத்துச் செல்ல விரும்பாதபடி நிழலைச் செய்கிறது.
|
|
|