அணியியல் - தற்குறிப்பேற்றவணி

253 

 இப்பாடலில், மதியம் தேய்தல் இயற்கையாகவும், கவி அத்தேய்தலுக்கு ஒரு கற்பனை
 செய்து காரணம் காட்டுதற்கண் தற்குறிப்பேற்ற அணி இயங்குதிணையிடத்தே
 வந்தவாறு.]

     நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம் வருமாறு :

    "வேனில் வெயிற்குஉலந்த மெய்வறுமை கணடுஇரங்கி,
     வானின் வளம்சுரந்த வண்புயற்கு, -- தான்உடைய
     தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்
     போதும் மீதுஏந்தும் பொழில்" 

 என வரும். பிறவும் அன்ன.

     [முதுவேனிற் காலத்தில் கதிரவன் வெப்பம் தாளாமல் உலர்ந்த தன் மேனி
 வாட்டத்தை அறிந்து அதனைப் போக்குதற்கு மழை பொழிந்த கார்மேகத்திற்குக்
 கைம்மாறாகச் சோலைவானளாவிய தன் பெரிய கிளைகளாகிய
 கைகளால்மகரந்தத்தையும், தேனையும், பூக்களையும், ஏந்தி நிற்கிறது - என்ற
 இப்பாடலில்,

     வானளாவிய மரங்களில் பூக்களும் தேனும் மகரந்தமும் இயற்கையாகக் காணப்பட
 அதற்குக் கவி ஒரு கற்பனை செய்து உரைத்த நிலைத்திணைத் தற்குறிப்பேற்ற
 அணியைக் காண்க.]

    "சான்றோர் வருந்திய வருத்தமும் நமது
     வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி" 

     என - அன்ன என்பதூஉம்,

    "காமருதேர் வெய்யவன் எங்கும் கரம்பரப்பித்
     தேமருவு சோலை மலர்திறக்கும், -- தாமரையின்
     தொக்க இதழ்விரித்துப் பார்க்கும், தொலைந்துஇருள்போய்ப்
     புக்க புரைகிளைப்பான் போல்" 

 எனப் போல் என்பதூஉம் வந்தன. ஏனையவும் வந்துழிக் காண்க.             (37)