[சினம் மிக்கவனும் வேலை ஏந்தியவனும் ஆகிய தலைவனால் துதிக்கை துணிக்கப்பட்ட யானை தன்னை நோக்கி எதிர்த்து வந்தபொழுது, தலைவி, கைகளை நெரித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டு கால்கள் தளர்ந்து, உடல் நடுங்க, கரிய அரிபரந்த கண்கள் நீரைத் ததும்ப, வாய் பசையற்று உலர்ந்துவிட்டாள்- என்ற இப்பாடலில், கை நெரித்தல் முதலியன அச்சச் சுவையை விளக்கியவாறு.
"அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே" - தொ. மெ. 8
என்பதனுள் இப்பாடலில் விலங்கு நிலைக்களனாக அச்சம் பிறந்தவாறு கூறப்பட்டுள்ளது.]
இழிப்புச்சுவை வருமாறு :
"உடைதலையும் முளையும் ஊன்தடியும் என்பும்
குடரும் கொழுங்குருதி ஈர்ப்ப, -- மிடைபேய்
பெருநடம்செய் பெற்றித்தே, கொற்றப்போர்க் கிள்ளி
கருநநரைக் கொன்ற களம்"
என வரும்.
[போரில் வெற்றி பெறும் கிள்ளி கருநட நாட்டினரை வெகுண்டு வென்ற போர்க்களம், உடைந்த தலைகள் முளை புலால் துண்டங்கள் எலும்பு குடர் என்பனவற்றைக் குருதி வெள்ளம் தன்னகத்தே இழுத்துவர, அங்கு வந்த பேய்கள் பெரிதாக நாட்டியமாடும் இயல்பிற்று - என்ற இப்பாடலில், குருதியாற்றில் உடைந்த தலைகள் முதலியன இழுக்கப்பட்டு வர இடையே பேய் கூத்தாடும் என்ற இழிப்புச்சுவை புலப்படுத்தப்பட்டவாறு.
"மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே" - தொ. மே. 6
என்ற நிலைக்களன்களுள் பகைவருடைய மென்மை காரணமாக இளிவரல் பிறந்தவாறு.] |
|
|