அணியியல் - சுவையணி

283 

     வியப்புச்சுவை வருமாறு :

    "முத்துஅரும்பிச் செம்பொன் முறிததைந்து, பைந்துகிரின்
     தொத்துஅலர்ந்து, பல்கலனும் சூழ்ந்துஒளிரும்-கொத்தினதாம்
     பொன்ஏர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
     தன்நேர் பொழியும் தரு"     

 என வரும்.

     [பொன்னையும் அழகிய மணிகளையும் கொழிக்கும் பொலிவுடைய காவிரி பாயும்
 நாட்டையுடைய சோழ மன்னனுக்கு நிகராகக் கொடுக்கும் கற்பக மரம், முத்துக்களை
 அரும்பிப் பொன்மயமான தளிர்கள் செறிந்து பவழத்தின் கொத்து மலர்ந்து பல
 அணிகலன்களும் சூழ்ந்து ஒளி வீசும் கிளைகளையுடையது - என்ற இப்பாடலில்,
 முத்து, பொன், பவளம் முதலியவற்றை மரம் தன் உறுப்புக்களாகக் கொண்டிருக்கும்
 வியப்புப் புலப்படுத்தப்பட்டவாறு.

    "புதுமை பெருமை சிறுமை ஆக்கமென
     மதிமை சாலா மருட்கை நான்கே"                        - தொ. மெ. 7 

 என்ற வியப்பின் நிலைக்களன்கள் நான்கனுள் இதன்கண் புதுமை பற்றி மருட்கை
 பிறந்தவாறு.]

     காமச்சுவை வருமாறு :

    "திங்கள் நுதல்வியர்க்கும் ; வாய்துடிக்கும், கண்சிவக்கும்,
     அங்கைத் தளிர்நடுங்கும் ; சொல் அசையும், -- கொங்கை
     பொருகாலும் ஊடிப் புடைபெயருங் காலும்,
     இருகாலும் ஒக்கம் இவட்கு"

 என வரும்.

     [தலைவியோடு கூடும்போதும், அவள் ஊடலால் பிரிந்திருக்கும்போதும் பிறை
 போன்ற நெற்றி வியர்த்தலானும் வாய் துடித்தலானும் கண்கள் சிவத்தலானும்
 கைகளாகய தளிர்கள் நடுங்குதலானும் சொற்கள் தடுமாறுதலானும் அவளுக்கு