இரு நிலையும் ஒரே தன்மையவாய் உள்ளன - என்ற இப்பாடலில், நுதல் வியர்த்தல் முதலிய காமச் சுவைக்குரிய மெய்ப்பாடுகள் சுட்டப்பட்டமை காண்க.
"செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே" - தொ. மெ. 11
என்ற காமத்திற்குரிய நிலைக்களன்கள் நான்கனுள், புணர்வு நிலைக்களனாகக் காமம் பிறந்தவாறு காண்க.]
அவலச்சுவை வருமாறு :
"கழல்சேர்ந்த தாள்விடலை, காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்நெஞ்சு அயர்ந்தான், -- "குழல்சேர்ந்த
தாமம் தரியாது அசையும் தளிர்மேனி
ஈமம் தரிக்குமோ"? என்று?
என வரும்.
[காலில் வீரக்கழர் அணிந்த காளைப்பருவத்தானாகிய தலைவன் இறந்த தன் காதலியின் உடலைத் தீயிலிட்டு அவள் உடலைத் தீத்தீண்டிய அளவில் "தலையில் வைத்த மாலையின் பாரம் தாங்காமல் அசையும் தளிர்போன்ற இவள் உடல் ஈமப்புறங்காட்டுத் தீயைத் தாங்குமோ" என்று தன் மனத் தளர்ந்தான் -- என்ற இப்பாடலில், தலைவியின் இறத்தல் காரணமாகத் தலைவற்கு அவலம் பிறந்தவாறு.
"இளிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே" - தொ. மெ. 5
என்ற அவலத்தின் நிலைக்களன்கள் நான்கனுள் இழவு பற்றி அவலம் பிறந்தவாறு காண்க.]
உருத்திரச்சுவை வருமாறு :
"கைபிசையா, வாய்மடியா, கண்சிவா, வெய்துஉயிரா,
மெய்பனியா, வேரா, வெகுண்டெழுந்தான், -- வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான், மகளைத் தருகென்று
போர்வேந்தன் தூதுஇசைத்த போது"
|
|
|