"உதாத்தம் பொருளில் பதார்த்தம் மிகலே." - தொ. வி. 355
"ஆக்கத் துயர்வும் அகத்தின துயர்வும்
மிகுதி யாக விளம்புவது உதாத்தம்" - மு. வி. பொ. 92
"செல்வ மிகுதியை ஆதல் செப்புறும்
அருங்கதை புகழ்பொருட்டு அங்கமா யாதல்
கூறுவது வீறு கோள்அணி என்ப." - ச. 121
"தங்கும் நிறைவின் வரலாற்றை மேற்சரி தம்புகழ்தற்கு
அங்கம் உறலைச் சொலல்வீநு கோளணி." - கு. வ. அ. 95
[இஃது உதாரதை எனவும் வீறுகோளணி எனவும் கூறப்படும்.]
செல்வமிகுதி வருமாறு :
"கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
என்றும் வறியோர் இனம்கவர்ந்தும், -- ஒன்றும்
அறிவுஅரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
செறிகதிர்வேல் சென்னி திரு"
என வரும்.
[ஒளிவீசும் வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வம், தன்னை எதிர்த்த வலிய வேந்தர்களுடைய செல்வம் பலவற்றையும் கவர்ந்து வருவதால் பெருகியும், நாடோறும் இரவலர் கூட்டம் பரிசு பெற்றுச் செல்வதால் சுருங்கியும், வரவும் செலவும் இன்ன இன்ன என்று அறியமுடியாத இயல்பினதாய் உள்ளது -- என்ற இப்பாடலில், சோழனுடைய வீரச் செல்வமும், கொடைச் செல்வமும் மிகுத்துக் கூறப்பட்டவாறு காண்க.]
உள்ளமிகுதி வருமாறு :
"மண்அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
பண்ணும் தவத்துஇயைந்த பார்த்தன்தான், -- எண்இறந்த
மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான்,
கோதண்ட மேதுணையாக் கொண்டு"
என வரும். பிறவும் அன்ன. (50) |
|
|