இது நிறுத்தமுறையானே விரோதம் என்ற அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபாட்டுத்தன்மை
விளைவுதோன்ற உரைப்பது விரோதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இது தொடை வகையுள் ஒன்றாகிய முரண்தொடை ஆகும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 82
"சொல்லும் பொருளும்,
புல்லும் விரோதம் புணரின் முரண்என்ப பொற்றொடியே." - வீ. 173
"சொற்பொருள் முரணத் தொடுப்பது விரோதம்." - மா. 181
"அதுவே,
சொல்லும் பொருளும் ஒருமையின் பன்மையின்
தம்மின் முரணும் சால்புஒரு நான்காய்ச்
சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும்
ஒல்லுபு முரணலின் ஓரைந் தாகும்." - மா. 182
"விரோதம் என்ப விகற்ப முரண்படு
மன்னிய சொற்பொருள் உன்னியம் ஆக்கலே." - தொ. வி. 360
"முரணப் படும்பொரு ளொடுமொழி யானும்
முரணப் படுமியல்பு ஆக்கமுன் தோன்றல்
விரோதம் எனப்பெயர் வேண்டப் படுமே." - மு. வீ. பொ. 38]
சொல் விரோதம் வருமாறு :
"சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க,
ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; - ஞாலம்
குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;
விளர்த்த, துணைபிரிந்தார் மெய்"