அணியியல் - விரோதவணி

315 

     [கார்காலம் தொடங்கிய அளவில் சோலைகளில் வேனிற் காலத்தில் மகிழ்வோடு
 வாழ்ந்த குயில்கள் தம் இனிய இசையை விடுத்து ஒடுங்கி விட்டன; தோகையை
 விரித்து ஆடும் மயில்கள் ஆரவாரித்து மகிழ்வோடு புறப்பட்டன; உலகம் குளிர்ந்தது;
 மேகங்கள் கறுத்தன; சிவந்த இந்திரகோபப் பூச்சிகள் வெளிப்பட்டன; துணைவரைப்
 பிரிந்தவர் உடல்கள் வெளுத்தன - என்ற இப்படலில்,

     சோர்ந்தடங்க - ஆர்த்தெழுந்த என்ற தொடர்களும், கறுத்த - சிவந்த விளர்ந்த
 என்ற சொற்களும் முரண்பட்ட கருத்தினவாய்த் தோன்றுதல் காண்க.

     இப்பாடல் சொல்பற்றிய முரண்.]

    "காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்,
     மேலை வினைஎல்லாம் கீழாவாம்; - கோலக்
     கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
     பெருமானைச் சிற்றம் பலத்து"

 என வரும். பிறவும் அன்ன.

     [காலையினும் மாலையினும், அழகிய கரிய யானைத் தோலினைச் செம்மேனியில்
 போர்த்து வெண்ணீறணிந்து பசிய கொன்றை மாலை சூடியுள்ள பெருமானைச்
 சிற்றம்பலத்தில் நம் கைகளைக் கூப்பித் திருவடிகளில் விழுந்து தொழுதால், நம்
 பண்டைப் பல் பிறவியின் வினைகளும் நம்மை விடுத்து நீங்கி விடும் - என்ற
 இப்பாடலில்,

     காலை, மாலை-கை, கால்-மேலை கீழ்,-கருமான், வெண்ணீறு, செம்மேனி,
 பைந்தார் - பெரு, சிறு - என்ற முரண்பட்ட பொருளைத் தரும் சொற்கள்
 அமைந்தவாறு காண்க. இது பொருள் பற்றிய முரண்.]