அவற்றுள், முதலடி ஆதிமடக்கு வருமாறு :
"துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்க
உறைவார்க்கும் உண்டாங்கொல் சேவல் - சிறைவாங்கிப்
பேடைக் குருகுஆரப் புல்லும் பிறங்குஇருள்வா
வாடைக்கு உருகா மனம்"
என வரும்.
[நெய்தல்நிலத் தலைவனே ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத் துணைவர் பிரிகையினாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும் இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம், அப்பிரியப்பட்ட மகளிருக்கும் உண்டோ? - என்று தோழி கூறியது.
துறைவா - நெய்தல் நிலத் தலைவனே.
துறை வார் - நீர்த்துறைக்கண் நேரிதான.
இது முதலடி முதல் மடக்கு ஆமாறு காண்க.]
இரண்டாம் அடி ஆதிமடக்கு வருமாறு :
"கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கில்
இனியார் இனியார் எமக்குப் - பனிநாள்
இருவராய்த் தாங்கும் உயிர்இன்றி எங்குஉண்டு
ஒருவராய்த் தாங்கும் உயிர்"
என வரும்.
[காவல ! கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை உடைய இவள் தனித்திருக்க நீ பிரிந்து செல்லாயாயின், எங்களுக்கு இனிமேல் யார் இன்சொற்போசி மகிழ்விப்பார்கள்? பனிக் காலத்துக் கூடியவராகிய தலைவன் தலைவியராகிய இருவரும் தாங்கும் உயிரே அல்லாமல், பிரிந்து ஒருவராய் இருந்து தாங்கும் உயிரும் உண்டோ? - என்று தோழி தலைவன் பிரிவைத் தடுத்தது.
இனி யார்-இனிமேல் யாவர்.
இனியார்-இனிமை தருபவராயிருப்பார்.
இஃது இரண்டாமடி முதல்மடக்கு ஆமாறு.] |
|
|