390

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 

     கங்காபுரம் ஆளி கை, கங்காபுர மாளிகை -- இத்தொடரில் ஒற்றைப் பிரிக்க,
வேறுபட்ட இருபொருள் தந்துள்ள நயம் காண்க.

     இப்பாடலின் முதல் இரண்டடிகள் கங்காபுரம் ஆளி ஆகிய சோழனுடைய
கைகளுக்கும், கங்காபுரத்திலுள்ள மாளிகைக்கும் சிலேடையாக அமைந்துள்ளவாறும்
காண்க.

     இப்பாடல் ‘கங்காபுர மாளிகை’ என்ற தொடர்ப் பொருளை இருவகையாய்ப்
பிரித்துக் கொண்டவாறு. ‘ஒற்றினைப் பிரிக்கமற் றொருபொருள் உணர்த்துதல்
ஒற்றுப் பெயர்த்தல் என்றுரை உணர்த்தும்.’ - மா. 299 அ.

     ‘ஒருமொழி தொடர்மொழி யாகஒண் பொருள்படு
     மவற்றை அப்பொருள் தவிர மறுபொருள்
     பெறச்சொலல் ஒற்றுப் பெயர்த்த லாகும்.’ - மு. வீ. சொ. 24 ]

8. வினா உத்தரம்

வினா உத்தரம் என்பது ஒரு சொற்றொடரைப் பிரித்துப் பதந்தொறும்
வினாவுதற்கு உத்தரமாகப் பதப்பொருள் உரைத்துக் கடைக்கால் வினாயதற்கு
உத்தரமாக அத்தொடர் முழுதும் ஒரு பொருளாக்கி உரைப்பது.

வரலாறு :

     ‘பூமகள்யார்? போவானை ஏவுவான் என்உரைக்கும்?
     நாமம் பொருசரத்திற்கு என்என்பர்? -- தாம்அழகின்
     பேர்என்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
     சேர்வுஎன்? திருவேகம் பம்’

என வரும்.

[ பூமகள் யார்? - திரு.

     போகின்றவனை ஏவுகின்றவன் என்ன சொல்லி அனுப்பி வைப்பான்? - ஏகு.