என வரும். வினை என்றாரேனும், கன்னிஎயில், குமரி ஞாழல் என்றாற்போல
வருவனவும் கொள்க. இச் சமாதி இருவகை நெறிக்கும் ஒக்கும்.
[ஏனைய பூதங்களும் தன்னிடத்தில் ஒடுங்குமாறு அகன்ற ஆகாயத்தில்
பரவியிருக்கும் இருட்டினை விழுங்கிப் பகலைக் கக்கிக்கொண்டு தோன்றும் பல
கிரணங்களை உடைய ஞாயிறு - என்ற பாடல்அடிகளில் இருளைப் போக்குதலையும்,
பகலை வெளிப்படுத்தலையும் உடைய சூரியனுக்கு, மனிதருக்கு உள்ள பண்புகளாகிய
பருகுதலையும் கக்குதலையும் புணர்த்துக் கூறுவது இவ்வணியாகும்.
உயர்திணையில் பெண்பாலுக்கு உரிய இயல்புகளாகிய கன்னித்தன்மை,
குமரித்தன்மை என்பனவற்றை அத்தன்மைகளுக்கு உரிமைஉடையன அல்லாத மதில்,
ஞாழல் என்ற அஃறிணைப் பொருள்களுக்கு ஏற்றிக் கன்னி எயில், குமரி ஞாழல்
(ஒரு மரம்) என்று கூறுவதும் இவ்வணியாம்.
"கடுங்கை வயல்உழவர் காலைத் தடிய
மடங்கி அரியுண்ட நீலம் - தடம்சேர்ந்து
நீள்அரிமேல் கண்படுக்கும் நீள்நீர் அவந்தியார்
கோள்அரியேறு இவ்விருந்த கோ"
என்ற பாடலும் தண்டியலங்காரத்தில் உள்ளது.
உபமேயமாகிய கண்ணின் செயலாகிய உறங்குதலை உபமான மாகிய நீலமலருக்கு
ஏற்றி, "நீலம் கண்படுக்கும்" என்று கூறுவது சமாதி அணியாம்]