82

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 சாதித்தன்மை வருமாறு :

    "பத்தித்த அகட்ட, கறைமிடற்ற, பைவிரியும்
     துத்திக் கவைநாத் துளைஎயிற்ற; - மெய்த்தவத்தோர்
     ஆகத்தான், அம்பலத்தான், ஆரா அமுதுஅணங்கின்
     பாகத்தான், சாத்தும் பணி"

 என வரும்,

     [தவத்தோர் மனமாகிய உட்புறத்தும் அம்பலமாகிய புறத்திடத்தும் கலந்திருக்கும்
 பார்வதி பாகனாகிய சிவபெருமான் சூடும் பாம்புகள், கோடுகள் பொருந்திய வயிற்றை
 உடையன; கரிய கழுத்தினை உடையன; படத்தின்கண் புள்ளிகளை உடையன;
 பிளப்பான நாவினை உடையன; உட்டுளை உடைய பற்களை உடையன -என்ற
 இப்பாடலில்,பத்தித்த அகடு, கறை மிடறு, துத்தி உடைய படம், கவை நா, துளை
 எயிறு என்பனவற்றைப் பெற்றிருக்கும் பாம்பினது சாதித்தன்மை விளக்கி
 உரைக்கப்பட்டவாறு.]

 தொழில்தன்மை வருமாறு :

    "சூழ்ந்து, முரன்று,அணவி, வாசம் துதைந்துஆடித்
     தாழ்ந்து, மதுநுகர்ந்து, தாதுஅருந்தும்; - வீழ்ந்துஅவிழ்ந்த
     பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
     வாசத்தார் நீங்காத வண்டு"

 என வரும்.

     [பாசம் நீங்கிய அடியார்களை விட்டு நீங்காத சிவபெருமானுடைய கொன்றைப்
 பூமாலையை நீங்காத வண்டு, அம்மாலையையே சுற்றிக்கொண்டு ஒலி எழுப்பி
 நெருங்கிச்சென்று மணத்தைச் செறிந்து பூவினுள் தாழ்ந்து தேனை உண்ட
 மகரந்தத்தைத் தின்னும் - என்ற இப்பாடலில், வண்டின் தொழில்களாகிய சூழ்தல்,
 முரலுதல், அணவுதல், வாசத்தில் துதைந்து ஆடுதல், தாழ்தல், மது நுகர்தல், தாது
 அருந்துதல் என்பன விளக்கிக் கூறப்பட்டவாறு.]                             19