242
242

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


   

    ‘சொன்னமா தரைக்கண்டு கனவில் சேர்ந்தோன்

     பாங்கற்கு, இன்னலுரைத் திடுதல் அநு ராகமாலை.’

                                           - சித. பாட். 38

 

     ‘பாங்கற்குப் புணர்ந்த கனவினால் தனது

     இன்னல் வரு ணித்தல் அநுராக மாலை

     ...    ...    ...    ...    ...    கலிவெண்      

     பாவினால் விரித்துப் பகருவது மரபே.’        

 - பி. ம. 33

 

     ‘தலைவன் ஒரு மங்கையைக் கனவில் கண்டுமால்

          தரும் அவட்கு இனிமை உறவே

     காவின் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கனைக்

          கருதியே நேரிசையெனும்

     கலிவெண் பாவால் கூறல் அநுராகமாலையாய்க்

          கவிஞர்கள் உரைப்பார்களே.              

- பி. தீ. 9

 

     ‘கனவின் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து

     இனிமை உறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப்

     பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக

     நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துவது

     அநுராக மாலையாம் ஆயுங் காலே.’

                   - மு. வீ. யா. ஒ. 87; தொ. வி. 283 உரை.

                                                104

 

மெய்க்கீர்த்திமாலை

 

865. சொற்சீர் அடியான் தொழில்படு கீர்த்தியைப்

    பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை.

 

இது மெய்க்கீர்த்தி மாலையின் இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த கீர்த்தியை அழகுற மொழிதல் மெய்க்கீர்த்திமாலையாம் என்றவாறு.                    

  (105)