பாட்டியல் - நூற்பா எண் 179                           

379


 

     பல்இயம் இயம்பப் பாவையர் ஆடப்

     பாணரும் மகளிரும் பல்லாண்டு இசைதா

     அந்தணர் நசைதர வாழ்த்த ஒண்பூ

     மலராடை புனைந்துஒரு தவிசின் மேவி

     எதிராய் வேறும்ஓர் தவிசில் இருத்தி

     மங்கலப் பாடல் ஏற்றுஉளம் மகிழப்

     பொன்புவி வத்திரம் பூண்பன பிறவும்

     உதவி ஏழடி புலவ னுடன்போய்

     மீள்வது கடன்என விளம்பினர் மேலோர்.’      

- பி. ம. 55

                                                    179

 

அகலக்கவி கொள்வோர் பெறும் பயன்

 

940. முன்மொழிக்கு என்று மொழிந்தவும் பெயர்ப்பால்

    நன்மை தரூஉம் நயனும்ஆ ராய்ந்து

    ஒண்மையின் புலவன் உரைத்த கவியை

    வண்மையின் புனைந்தோர் வான்புகழ் உருவான்

    மாமதி பரிதி யாம்எனச் சிறந்து

    மன்னிவீற் றிருப்பர் இந்நிலத்து உயர்ந்தே.

 

இது மேற்கூறிய இலக்கணங்களான் அமைந்த அகலக் கவியைக் கொண்டோர்
பெறும் பயன் கூறுகின்றது.

 

     இ - ள்: முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும்,
இயற்பெயரிடத்து நன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும்
உணர்ந்து நுட்பத்தால் புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய
வரிசை செய்து புனைந்தோர் பெரிய புகழானும் உருவத்தானும் முறையே
நிறைமதியும் இளஞாயிறும் இவராம் எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழ்
உடம்பான் நிலை பெற்றுத் தலைமை எய்தி இருப்பர் என்றவாறு.
 

     ‘உருவும் புகழும் ஆகுவிர் நீர்.’                    

- புறநா. 6

 

என்றார் பிறரும்.