பாட்டியல் - நூற்பா எண் 2

77


 

பாட்டின் இலக்கணம்

  

762. அவற்றுள்,

       பாட்டெனப் படுவது பைந்தமிழ் நாட்டகத்து

       யாப்புறச் செய்பா உறுப்புஎழுந்து இசைக்கும்.

  

இது நிறுத்த முறையானே முதற்கண் நின்ற பாட்டு இவ்வியல்பிற்று
என்கின்றது.
  

         [இ-ள்] முற்கூறிய எழுவகைச் செய்யுளுள் பாட்டு என்று
சிறப்பித்துச் சொல்லப்படுவது மூவேந்தரது குளிர்ந்த தமிழ்நாட்டு எல்லைக்கண் தொன்றுதொட்டு வழங்கும் யாப்புறச் செய் பா என்னும்
உறுப்பான் மிக்கு ஒலிக்கும் என்றவாறு.
  

         எனவே, ஏனை அறுவகைச் செய்யுளும் அடிவரை இன்றிப்
பாஉறுப்பாக இசைக்கப்படா என்பதூஉம் பெற்றாம். பெறவே, பா என்பது
பாவின்வேறாய் நின்று உறுப்பு ஆமாறு என்னை எனின், அது சேட்புலத்து
ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன்
பாடுகின்ற செய்யுளை விகற்பித்து இன்னது என்று உணர்தற்கு ஏதுவாகிப்
பரந்துபட்டுச் செல்வதோர் ஓசையே பா என நின்று பா என்பதற்கு
உறுப்பான் வந்த பெயர் ஆயிற்று.
  

         பாட்டு என்பது, ஆடல் ஆட்டு என்றாற்போலப் பாடல் பாட்டு
எனநின்று ஆகுபெயரான் அத்தொழில் உறுகின்ற ஓசைமேல் நின்று அது
பாட்டாயிற்று. அன்றியும் பாணை உடையது பாட்டு எனக் குறிப்பு
வினைமுற்று என்பதூஉம் ஆம்.